பாஜகவில் பிரதமர் மன்மோகன்சிங் சகோதரர்! பணத்துக்காக சேர்ந்ததாக குடும்பத்தினர் புகார்!!
அமிர்தசரஸ்: பிரதமர் மன்மோகன்சிங்கின் சகோதரர் தல்ஜித்சிங் கோஹ்லி பாரதிய ஜனதா கட்சியில் நரேந்திர மோடி முன்னிலையில் இணைந்தார்.
பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாபில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் மன்மோகன்சிங்கின் சகோதரரான தல்ஜித்சிங் கோஹ்லி மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அவரை வரவேற்றுப் பேசிய மோடி, இன்று பிரதமர் மன்மோகன்சிங்கின் சகோதரர் பாஜகவில் இணைந்துள்ளார். இது நமக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். நமது உறவு வெறும் கட்சி உறுப்பினர்களிடையேயான உறவு அல்ல. நம்மிடையே இருப்பது ரத்த உறவாகும் என்றார்.
இந்த கூட்டத்தில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குடும்பத்தில் கடும் எதிர்ப்பு...
பாஜகவில் தல்ஜித்சிங் இணைந்ததற்கு அவரது குடும்பத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தல்ஜிசிங்கின் அண்ணன் சுர்ஜித்சிங் மிகவும் அதிருப்தியில் இருப்பதால் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த மந்தீப் கூறுகையில், பாஜகவினர் கட்சியில் சேருமாறு தல்ஜித்சிங் கோஹ்லியை கேட்டனர். அத்துடன் நல்ல பதவி, பண உதவி செய்வதாகவும் கூறினர். அதனால் அவர் இணைந்துவிட்டார் என்றார்.
மேலும் தல்ஜித்சிங் தற்போது நடத்தி வரும் ஆயத்த ஆடை தொழிலில் போதுமான லாபம் இல்லை. இதனாலேயே அவர் பாஜகவில் இணைந்துவிட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.