திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத மோடி: தெலுங்கு தேசம் எம்.பி
டெல்லி: லோக்சபாவில் இன்று, நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்த தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது: ஆந்திரா-தெலுங்கானா பிரிவினை அறிவியல் பூர்வமாக செய்யப்படவில்லை. தெலுங்கானா புதிய மாநிலம் கிடையாது, ஆந்திராதான் புதிய மாநிலம். ஆந்திராதான் தலைநகர் உட்பட அனைத்தையும் புதிதாக உருவாக்க வேண்டிய மாநிலம். இவ்வாறு அவர் பேசியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
தெலுங்கானாவைவிட ஆந்திராதான் வஞ்சிக்கப்பட்டதாக ஜெயதேவ் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் கோரிக்கையையேற்று தர்ணா கைவிடப்பட்டது.
இதன்பிறகு ஜெயதேவ் கல்லா பேசுகையில், ஜனார்த்தன ரெட்டி குடும்பத்திற்கு கர்நாடகாவில் பாஜக போட்டியிட சீட் கொடுத்தது. பிரதமர் நரேந்திர மோடியின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை இதுதான். எந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவதே இல்லை.
திருப்பதி பாலாஜி முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை கூட மோடி நிறைவேற்றவில்லை (இவ்வாறு அவர் கூறியபோது சக கட்சி எம்.பி ஒருவர் ஏழுமலையான் குட்டி சிலையை கையில் எடுத்து அவைக்கு காண்பித்தார்).
Jayadev Galla Trends. Meet The TDP Lawmaker Who Opened No-Trust Debate https://t.co/yPofYuGk7x pic.twitter.com/kMDuuETfOb
— Kumar (@Jaikumar099) July 20, 2018
டெல்லியை விட சிறப்பான தலைநகர் ஆந்திராவுக்கு உருவாக்கப்படும் என்றார் மோடி. ஆனால், ஆந்திராவின் தேவையில் 2% நிதியை ஒதுக்கிவிட்டு, எல்லா வாக்குறுதியும் நிறைவேறிவிட்டதாக மோடி கூறுகிறார்.
சத்ரபதி சிவாஜி சிலையை உருவாக்க ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு செய்துவிட்டு, ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை உருவாக்க வெறும் ரூ.1500 கோடியை ஒதுக்கீடு செய்வது எப்படி நியாயமாகும்.
எந்த பிரதமரை நாங்களும், ஆந்திர மக்களும் நம்பினோமோ அவர் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். மீண்டும் பாஜகவிற்கு ஆந்திரா மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்? பிரதமர் நேரத்திற்கு ஏற்பவெல்லாம் மாற்றி மாற்றி பேசி வருகிறார். ஆந்திர மக்கள் காங்கிரசை போலவே பாஜகவையும் புறக்கணிப்பார்கள். இது மிரட்டல் இல்லை, உண்மை. இவ்வாறு ஜெயதேவ் கல்லா தெரிவித்தார்.
லோக்சபா விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி அவையில் இருந்து கவனித்து வந்தார். காங்கிரசின் சோனியாகாந்தி, ராகுல் காந்தி போன்ற முக்கிய தலைவர்களும் அவையில் இருந்தனர்.