அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி, ராகுல் நாளை தமிழகம் வருகை
டெல்லி : மறைந்த அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாளை (30-07-2015) தமிழகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியிலிருந்து அப்துல் கலாமின் உடல் இன்று ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
தொடர்ந்து நாளை (30-07-2015) அப்துல் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தனித் தனித் விமானங்களில் வருவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியுடன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கலாம் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார். இதே போன்று கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டியும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக டெல்லியிலிருந்து அப்துல் கலாம் உடலை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான குழு ராமேஸ்வரம் கொண்டு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஏதுவாக கலாம் உடல் முப்படை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.