இருண்ட காலத்தை நினைவுபடுத்துகிறது.. எமர்ஜென்சி தினத்தில் மோடி ஆதங்கம்
எமர்ஜென்சி, இருண்ட காலத்தை நினைவுபடுத்துகிறது என்று விமர்சித்து பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளார்.
Recommended Video
எமர்ஜென்ஸி அமல்படுத்தப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், எமர்ஜென்ஸி இருண்ட காலத்தை நினைவுபடுத்துகிறது என்று விமர்சனம் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த எமர்ஜென்சி காலம் என்பது இந்திய ஜனநாயகத்தில் இருண்ட காலமாக கருதப்படுகிறது. எமர்ஜென்சி காலகட்டத்தில் குடிமக்களின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் நசுக்கப்பட்டன. அரசியல் கட்சிகளின் எதிர்க்குரல்கள் இந்திரா காந்தி அரசால் ஒடுக்கப்பட்டன.
India remembers the Emergency as a dark period during which every institution was subverted and an atmosphere of fear was created. Not only people but also ideas and artistic freedom were held hostage to power politics.
— Narendra Modi (@narendramodi) June 26, 2018
இப்படியான எமர்ஜென்சி காலத்தை அமல்படுத்திய இந்திரா காந்தி குடும்பத்தையும் காங்கிரஸையும் இன்று ஆட்சியில் இருக்கும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று திங்கள் கிழமை எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாஜகவினரால் கருப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அனைவரும் இந்தியாவில் காங்கிரஸால் 21 மாதம் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்ஸி காலத்தை விமர்சித்து இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி எமர்ஜென்ஸி காலத்தைப் பற்றி தொடர் டிவிட் செய்துள்ளார். அதில் அவர், எமர்ஜென்ஸி இருண்ட காலத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்துள்ளதோடு, எமர்ஜென்சியை எதிர்த்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டில் குறிப்பிட்டிருப்பதாவது:
"எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டு 43 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த எமர்ஜென்சியை உறுதியுடன் எதிர்த்த ஆண்கள் பெண்கள் என அனைவரின் துணிவுக்கு வணக்கம். அவர்கள் சிவில் உரிமைகள் நசுக்கப்படுவதையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து போராடி மக்கள் சக்தியைக் காட்டியுள்ளார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது மற்றொரு டிவிட்டில், "இந்தியாவின் எமர்ஜென்சி அனைத்து நிறுவனங்களிலும் அச்ச நிலையை உருவாக்கி ஒரு இருண்ட காலமாக நினைவில் இருக்கிறது. இது மக்களை மட்டுமல்ல, கருத்து சுதந்திரத்தையும் கலை சுதந்திரத்தையும் அதிகார அரசியலுடன் இணைத்தது."என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்றொரு டிவிட்டில், "நாம் அனைவரும் ஜனநாயக அரசியல் பண்பாடு பலப்படுத்துவதற்கு பணி செய்வோம். நமது ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களான எழுதுவது, விவாதிப்பது, வெளிப்படுத்துவது, கேள்வி கேட்பது உள்ளிட்டவற்றை நாம் பெருமைப்படுத்துவோம். நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளை முறிப்பதற்கு எந்த சக்தியும் இல்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.