ஆப்பிரிக்க நாடுகளில் பயணத்தை தொடங்கினார் மோடி: முதல் நாடாக மொசாம்பிக்கு பயணம்
டெல்லி: ஆப்ரிக்க நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். டெல்லியில் இருந்து இன்று மொசாம்பிக் நாட்டின் மபுடோவிற்கு புறப்பட்டார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் சமீபத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். இந் நிலையில் அடுத்தக்கட்டமாக ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக், தென் ஆப்ரிக்கா, தான்சானியா, கென்யா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை புறப்பட்டார்.
மொசாம்பிக் தலைநகர் மபுடோவிற்கு இன்று சென்றடையும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அதிபர் பிலிபி நியூசியை சந்தித்து பேசுகிறார். கடந்த 34 ஆண்டுகளில் மொசாம்பிக் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியின் இந்த பயணத்தின் போது இந்தியாவில் பருப்பு விலையை கட்டுப்படுத்த ஆப்ரிக்க நாடுகளிலிருந்து அதிக அளவில் அந்த உணவுப் பொருளை இறக்குமதி செய்வது, இயற்கை எரிவாயு இறக்குமதி, சூரிய ஒளி மின்சாரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர கடற்சார் பாதுகாப்பு, ஹைட்ரோகார்பன், வர்ததகம், முதலீடு உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்தார் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு பிறகு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதில் 3வது பெரிய நாடாக மொசாம்பிக் உள்ளது. இந்தியாவில் உள்ள ஓஎன்ஜிசி உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகள் இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளில் நான்கில் ஒரு பங்கை மொசாம்பிக் பகிர்ந்து கொள்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் மொசாம்பிக்கு உடனான வர்த்தகம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 2 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது.
பின்னர் 8 மற்றும் 9ம் தேதிகளில் தென்ஆப்ரிக்கா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் ஜேகோப் ஜூமாவை சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து 10ம் தேதி தான்சானியா நாட்டிற்கு சென்று, அந்நாட்டின் அதிபர் ஜான் ஜோசப் மகுப்லியை சந்திக்கிறார். சுற்றுப்பயணத்தின் கடைசியாக, 11ம் தேதி கென்யாவுக்கு செல்லும் மோடி அதிபர் கென்யாட்டாவை சந்தித்து பேசுகிறார். 12-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மோடி நாடு திரும்புகிறார்.