மொரீசியஸ் தேசிய தின விழாவில் மோடி பங்கேற்பு! நாளை இலங்கை பயணம்!!
டெல்லி: மொரிசீயஸ் நாட்டின் தேசிய தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன் பின்னர் நாளை முதல் 3 நாட்கள் அவர் இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார்.
நேற்று செஷல்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி மொரீசியஸ் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இன்று அவர் அதிபர் ராஜ்கேஸ்வர் பூர்யாகையும், பிரதமர் அனிரூத் ஜகந்நாத்தையும் சந்தித்துப் பேசுகிறார்.
அதன் பின்னர் இன்று நடைபெறும் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். கடலோர ரோந்து கப்பலை இயக்கி வைக்கிறார். இந்திய நிதி உதவியுடன் நிறைவேற்றப்படும் திட்டங்களைப் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து இலங்கை புறப்பட்டு செல்கிறார்.
13 ஆம் தேதி இலங்கை செல்லும் பிரதமர் மோடி, அதிபர் சிறிசேன, இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
இச்சந்திப்பின்போது, பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மோடி செல்கிறார். அங்கு இந்தியா சார்பில் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளைப் பயனாளிகளுக்கு வழங்குகிறார். புதியதாகத் தொடங்கப்படவுள்ள யாழ்ப்பாண கலாசார மையத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தலைமன்னாரில், புதிய ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, அனுராதபுரத்தில் உள்ள மகாபோதி மரத்தைப் பார்வையிடுகிறார். இந்திய அமைதிப்படையின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
முன்னதாக 3 நாடுகளுக்கும் சுற்றுப்பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய பெருங்கடலில் உள்ள செஷல்ஸ், மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய அண்டை நாடுகளுக்கான எனது பயணம், அந்நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்புக்கும், முன்னேற்றத்துக்கும் மற்ற நாடுகளுடன் உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். அதை கருத்தில் கொண்டே 3 நாடுகளின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை பயணத்தை அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கருதுகிறேன். இரு நாடுகளிடையே புதிய உறவு மலர இணைந்து பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.