எல்லோரும் பாஜகவுக்கு வாங்க.. மெம்பர் சேர்க்கும் பணி.. வாரணாசியில் தொடங்கினார் மோடி!
வாரணாசி: பா.ஜ.கவுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாரணாசிக்கு, இரண்டாவது முறையாக பிரதமர் மோடி விஜயம் செய்துள்ளார். பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான இன்று, புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை பற்றிய எனது எண்ணங்களை வரும் நாட்களில் விரிவாகக் கூறுவேன் என்றார்.
காலை 10 மணியளவில் கோயில் நகரான வாரணாசிக்கு வந்த பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை விமான நிலையத்தில் திறந்து வைத்தார். முன்னதாக, உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக், பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் அவரை வரவேற்றனர்.
இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, அந்தந்த மாநிலத் தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் நடந்த முதல் பா.ஜ.க. நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடி வரைவிற்குள்ளும் குறைந்தது ஐந்து மரங்களை நட வேண்டும். கட்சி எம்.பி.க்கள், யாராவது தங்கள் நடத்தை மூலம் கட்சிக்கு கெட்ட பெயரைக் கொண்டு வந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.