2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல் எய்ம்ஸ் மருத்துவமனை- திறந்து வைத்த மோடி- மதுரைக்கு விமோசனம் எப்போ?
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தி 2017-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய ரூ1470 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபையில் மொத்த இடங்கள் 68. இமாச்சல பிரதேச சட்டசபையில் பாஜகவுக்கு 47 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு 20 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக 45; காங்கிரஸ் 29; ஆம் ஆத்மி 1 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என கூறியது சி வோட்டர் கருத்து கணிப்பு. கடந்த முறை 48.8% வாக்குகளைப் பெற்ற பாஜக இம்முறை 45.2%; காங்கிரஸ் கட்சி 41.7%-ல் இருந்து 33.9%; ஆம் ஆத்மி கட்சி 9.5% வாக்குகளைப் பெறும் எனவும் தெரிவித்திருந்தது அக்கருத்து கணிப்பு.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல பிரதேசத்தில் இன்று ரூ.3,650 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் பிலாஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார்.இந்த மருத்துவமனைக்கு 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ரூ1470 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் தாக்கூர், அனுராம் தாக்கூர், பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எய்ம்ஸ் எங்கே? பாஜக தலைவர் நட்டா “பொய்” சொல்லிட்டாரு - மதுரை போலீசில் காங்கிரஸ் கட்சியினர் புகார்
எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்ட மோடி
பின்னர் பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இந்த மருத்துவமனையின் சி பிளாக்கிற்கு பிரதமர் வருகை தந்தார். பின்னர் பிலாஸ்பூர் வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் முப்பரிமாண மாதிரி காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் இந்த மருத்துவமனை திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில் ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிடி ஸ்கேன் மையம், அவசரகால சிகிச்சை மற்றும் விபத்துக்கான சிகிச்சை பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார்.
ரூ1470 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை
இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 1470 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 18 சிறப்பு பிரிவுகள் 17 பன்னோக்கு சிறப்பு துறைகள் ஆகியவற்றுடன் நவீன முறையில் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. 18 அறுவை சிகிச்சைக் கூடங்கள், 64 ஐசியு படுக்கைகளுடன் 750 படுக்கைகள் உள்ளன. 247 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த மருத்துவமனையில் 24 மணி நேர அவசர கால சிகிச்சை, டயாலிசிஸ் வசதி, அல்ட்ராசோனோகிராஃபி, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற நவீன நோய்கண்டறிதல் கருவிகளும் இங்கு உள்ளன. அம்ரித் மருந்தகம், மக்கள் மருத்துவ மையம், 30 படுக்கை வசதி கொண்ட ஆயுஷ் பிரிவு ஆகியவையும் உள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் பழங்குடி பகுதி மற்றும் தொலைதூர பகுதிகளிலும் சுகாதார சேவைகள் கிடைப்பதற்காக டிஜிட்டல் சுகாதார மையத்திற்கான அமைப்பையும் இந்த மருத்துவமனை கொண்டுள்ளது. எளிதில் சென்றடைய முடியாத பழங்குடிப் பகுதிகள், காஜா, சலூனி, கீலாங் போன்ற மிக உயரத்தில் உள்ள இமாலயப் பகுதிகள் ஆகியவற்றில் சுகாதார முகாம்கள் மூலம் சிறப்பு சுகாதார சேவைகளையும் இந்த மருத்துவமனை வழங்கும். இந்த மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் எம்பிபிஎஸ் வகுப்புகளில் 100 மாணவர்களும் செவிலியர் வகுப்புகளில் 60 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
மதுரை எய்ம்ஸ் சர்ச்சை
தமிழகத்தில் 2019-ம் ஆண்டு பிரதமர் மோடியால் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரை அங்கு சுற்றுச் சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி என எதுவுமே நடைபெறவில்லை. ஆனால் அண்மையில் தமிழகம் வருகை தந்த பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிவடைந்துவிட்டதாக கூறியது பெரும் சர்ச்சையானது. இதனால் மருத்துவமனையை காணவில்லை என தமிழக எம்.பி.க்கள் கிண்டலாக குரல் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இமாச்சல பிரதேச எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
சு.வெங்கடேசன் எம்.பி.
இது தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்திருந்த சு.வெங்கடேசன் எம்.பி, உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை திரு.@annamalai_k அறிக என தமது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.