ஆசியாவின் 2 வது மிகப்பெரிய பாலம்...பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
ஹவுகாத்தி: ஆசியாவிலேயே நீளமான இரண்டாவது பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
வாஜ்பாய் பிரதமரமாக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக, 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா அதற்கு அடிக்கல் நாட்டினார்.
கடந்த டிசம்பர் 3-ம் தேதி இந்தப் பாலத்தில் சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 32 கி.மீ செல்கின்றது. 4.94 கிலோ மீட்டர் கொண்ட போகிபீல் பாலம், மூன்று வழி சாலையாகவும், கீழ் பகுதியில் இரண்டு வழி ரயில் பாதையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
|
பிரதமர் திறந்து வைத்தார்
இந்த பாலம் நாட்டின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் ஆகும் . 16 ஆண்டுகளுக்கு பிறகு முடிக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துமஸ் தினமான இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து சாலையில் காரில் சென்று பார்வையிட்டார்.
பயண நேரம் மிச்சம்
வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமாக போகிபீல் பாலம் அமைந்துள்ளது.
அஸ்ஸாமில் உள்ள டின்குகியாவிற்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் நாகர்லகுன் நகரத்திற்கும் இடையேயான ரயில் சேவையால் 10 மணிநேரத்திற்கும் மேலான பயண நேரம் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 கி.மீ தூரமானது 100 கி. மீட்டராக சுருங்கி உள்ளது.
உள்கட்டமைப்பு மேம்படும்
5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போகிபீல் பாலம் இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லையில் மிகப்பெரிய பாலம் கட்டப்படுள்ளதால் தளவாடங்களை விரைவில் கொண்டுச் செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
விரைவில் கிடைக்கும்
போகிபீல் பாலம் திப்ருகருக்காக ஒரு தெய்வீக ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறோம் ஹவுகாத்திக்கு அடுத்தப்படியாக, திப்ரூகரு மிகப்பெரிய வர்த்தக மையமாகக் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கல்வி, சுகாதாரம் மற்றும் பிற சேவைகள் விரைவில் நிறைவேறும் என அஸ்ஸாம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.