மோடி தான் இப்போதும் நெம்பர் 1... அமெரிக்க நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் தகவல்
இந்தியாவின் பிரபலமான அரசியல் தலைவர் மோடி என்று கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
டெல்லி : மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் (Pew) என்கிற அமைப்பு ஊடக கருத்துக்கணிப்பில் மிகவும் புகழ்பெற்றது. இந்நிலையில், சமீபத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் மொத்தம் 2464 பேரிடம் எடுக்கப்பட்ட இந்தக் கருத்துக்கணிப்பில், 88% மக்கள் மோடிக்கு ஆதரவாக ஓட்டளித்து இருக்கிறார்கள். இவரை விட 30% பின் தங்கி 58% ஓட்டுகளைப் பெற்று இருக்கிறார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி.
மோடிக்கு அடுத்த இடத்தில்.....
இவர்கள் இருவரையும் அடுத்து 57% மக்களின் ஓட்டுகளைப் பெற்று இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. நான்காவது இடத்தில், அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பங்கு பெற்று தனியே அரசியல் கட்சி ஆரம்பித்து தற்போது டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். பிப்ரவரி முதல் மார்ச் வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.
மோடியின் புகழ் வளர்ச்சி
மோடியின் திறமையான நடவடிக்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான வகையில் முன்னேறி இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்து இருப்பதாக 30% மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை விட அதிகம் பேர் சிறப்பு என்று வாக்களித்து இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அதிகரித்துள்ள செல்வாக்கு
ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய தென்மாநிலங்களைப் பொறுத்தவரை 10 பேரில் 9 பேர் மோடிக்கு சாதகமாக பார்வையைக் கொண்டு இருக்கிறார்கள். அதுபோல வடமாநிலங்களான மகாராஷ்ட்ரா, குஜராத், சட்டீஸ்கரிலும் மோடிக்கு ஆதரவாக நிறைய பேர் வாக்களித்து இருக்கிறார்கள்.
கிழக்கு மாநிலங்களில் சரிவு
ஆட்சிக்கு வந்த 2014 காலகட்டத்தில் இருந்ததைப் போல், வட மாநிலங்களில் இன்னும் மோடிக்கு சாதகமான நிலையே நிலவுவதாகவும், தென் மாநிலங்களில் முன்பைவிட மோடிக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் கிழக்கு மாநிலங்களில் செல்வாக்கு குறைந்து இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
சீனா மீதான மதிப்பு
அது போல அமெரிக்காவுக்கு சாதகமான இந்தியர்களின் எண்ணிக்கையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2015ல் 70% இருந்தது இந்த ஆண்டு 49% மாறி இருக்கிறது. சர்வதேச அரசியலில் ட்ரம்ப் சிறப்பாக செயல்படுவார் என 40% பேர் வாக்களித்து உள்ளனர். இது முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கிடைத்ததைவிட, 34% குறைவு. அதுபோல சீனா மீதான நல்லெண்ணமும் மக்களிடையே குறைந்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ?
அதுபோல, இந்தியாவில் மத அச்சுறுத்தல் தான் மிகப்பெரிய வன்முறைக் காரணியாக இருப்பதாக பலர் வாக்களித்து இருப்பதாகவும், மோடியின் செல்வாக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறிது குறைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்கட்சிகள் மோடிக்கு செல்வாக்கு இல்லை; அவரின் மோசமான நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது என்று குறிப்பிட்டு வரும் நிலையில் இந்த கருத்துக்கணிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.