பிரதமர் கனவில் மிதந்து சூடுபட்டுக் கொண்ட தலைவர்கள்... சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்!!
Recommended Video
பிரதமர் மோடி வலுவான தலைவராக மாறுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமின்மையும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. பிரதமர் மோடியை பொது எதிரியாக கருதி எதிர்க்கட்சிகள் உழைத்தாலும், அனைத்து தலைவர்களும் பிரதமர் கனவில் மிதந்ததும் இந்த படுதோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது.
இதையெல்லாம் செய்ய ஒரு தில்லு வேணும்ங்க.. அது "தல" எச். ராஜா கிட்ட நிறையவே இருக்கு!
பாஜக கிண்டல்
எதிர்க்கட்சி தலைவர்களின் பிரதமர் ஆசையை பாஜக கிண்டல் செய்தது. வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கட்சியை சேர்ந்தவர் பிரதமர் பொறுப்பு வகிப்பார் என்று கூறி கிண்டலடித்து பிரச்சாரம் செய்தது. அந்த பிரச்சாரத்தின்படியே, எதிர்க்கட்சித் தலைவர்களின் நடவடிக்கைகள் இருந்தன.
சந்திரபாபு நாயுடு
பிரதமர் மோடியுடன் நட்பு பாராட்டி வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கைக்காக கூட்டணி உறவை முறித்துக் கொண்டு வெளியில் வந்தார். அந்த நாள் முதல் பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்தார்.
பிரதமர் கனவு
மேலும், பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டினார். ஆனால், ஓரளவு தொகுதிகளை கைப்பற்றினால், மூன்றாவது அணி அமைத்து பிரதமர் பொறுப்புக்கு தன்னை பரிந்து செய்ய நிர்பந்திக்கலாம் என்ற கனவில் மிதந்தார்.
மவுனம் சாதித்த நாயுடு
சென்னையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால், சந்திரபாபு நாயுடு அதனை வழிமொழியும் இல்லை; முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. இது அப்போதே விமர்சனங்களை கிளப்பியது. ஆனால், அவர் தேர்தலில் படுதோல்வியை தழுவி உள்ளார்.
கடைசி நேரத்தில் ராவுக்கு ஆசை
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் கடைசி நேரத்தில் மூன்றாவது அணி முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவர் பாஜக ரகசிய ஏஜென்ட்டாக தலைவர்களை சந்தித்து வருவதாக கூறப்பட்டது. அவருக்கும் பிரதமர் கனவு இல்லை என்று கூற முடியாது. எப்படியாவது எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி தனது ஆசையை வெளிப்படுத்தலாம் என்று இருந்தார். அவருக்கும் தேர்தலில் இடி விழுந்துள்ளது.
மாயமான மாயாவதி கனவு
இதில், பிரதமர் கனவை வெளிப்படையாக அறிவித்தவர்களில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் மாயாவதியும், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டணி போட்டி வெற்றி வாகை சூடினர். இதில், பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
மெகா கூட்டணி
இதனால், இந்த லோக்சபா தேர்தலில் தங்களது மெகா கூட்டணி உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி விடும் என்று கணக்கு போட்டு வேலை செய்தனர். உ.பி.முதல்வர் பதவி எனக்கு, பிரதமர் பதவி உங்களுக்கு என அகிலேஷ் யாதவும் வெளிப்படையாக பேக்கரி டீலிங்கை மாயாவதிடம் தெரிவித்தார்.
நிர்பந்தம்
இதனால், மாயாவதி பிரதமர் கனவில் மிதந்ததுடன், வேறு யாரும் பிரதமர் என்ற பேச்சுடன் தங்களை யாரும் அணுகக் கூடாதும் என்றும் நிர்பந்தமும் போட்டார். இது காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களது கூட்டணி மொத்தமே 15 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.
மம்தா கப்சிப்
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜியும் பிரதமர் வேட்பாளர் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ள முயன்றார். இதற்காக, பாஜகவை கடுமையாக விமர்சித்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து பேரணி நடத்தியதுடன், விருந்தும் கொடுத்து தன் பக்கம் இழுக்க முயற்சித்தார்.
வலுவாக காலூன்றிய பாஜக
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக மேற்குவங்கத்தில் வலுவாக கால் பதித்துள்ளது பாஜக. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை. இது அவருக்கு இரட்டை அதிர்ச்சியை தந்துள்ளது.
சத்தமில்லாமல் சாதித்த ஸ்டாலின்
அதேநேரத்தில், ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே இந்த தேர்தலில் நாடே திரும்பி பார்க்கும் வகையில், சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார். தனது தந்தை கருணாநிதி முரசொலி மாறனை வைத்து டெல்லி அரசியலை கவனித்தது போல, தனக்கு பக்கபலமாக கனிமொழியையும், தயாநிதி மாறனையும் நிறுத்தினார்.
தொண்டர்கள் உற்சாகம்
இந்த தேர்தலில் அவரது வெற்றி பயனில்லாது போல தோன்றினாலும் கூட, கருணாநிதி மறைவிற்கு சந்தித்த முதல் தேர்தலிலேயே அவர் வெற்றி வாகை சூடியிருப்பது, திமுக தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. வரும் தேர்தல்களில் சுறுசுறுப்பாக களப்பணி ஆற்றுவதற்கான வாய்ப்பையும் பெற்று தந்துள்ளது.
ராகுலை பலவீனப்படுத்திய தலைவர்கள்
பிரதமர் மோடி மீது ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளும், பிரச்சாரங்களும் எடுபடவில்லை என்பதுடன், ராகுலை பலவீனப்படுத்தியதில் பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்ட மாநிலக் கட்சி தலைவர்கள் முக்கிய பங்கு உண்டு.
திமுக அசத்தல்
தங்களது பிரதமர் கனவு பேராசையால் சாதாரணமாக கிடைக்க வேண்டிய தொகுதிகளையும் இழந்து அரசியல் எதிர்காலத்தையும் தொலைத்து புலம்பி வருகின்றனர். ஆனால், எதிர்காலத்தை வலுவாக்கும் விதத்தில் திமுக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.