இளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதியினரின் 9 நாள் இந்திய சுற்றுப்பயணம் தொடங்கியது
டெல்லி: 9 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமீலாவோடு இந்தியா வந்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-கமீலா பார்க்கர் தம்பதியர் நேற்று மாலை சுமார் 4.15 மணிக்கு தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன் , ஜாலிகிராண்ட் விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.
இந்தியாவில் 9 நாள் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர்களை அம்மாநில முதவர் விஜய் பகுகுணா, டி.ஜி.பி. பி.எஸ்.சித்து மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
கங்கா ஆரத்தி நிகழ்ச்சி...
வரவேற்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், இளவரசர் சார்லஸ்-கமீலா தம்பதியர் கார் மூலமாக ரிஷிகேசுக்கு புறப்பட்டனர். அங்கு, கடந்த ஜூன் மாதம் பெய்த கடும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக பரமார்த்த நிகேதனில் நடந்த கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர்.
இரவு விருந்து...
நேற்றிரவு, ரிஷிகேஷ் அருகில் உள்ள நரேந்திர நகர் ஓட்டலில் அவர்கள் தங்கினர். இன்று (வியாழக்கிழமை) டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி, வன ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட், டூன் பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளில் இளவரசர் தம்பதியர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் அரச தம்பதிகள். அதன் பின்னர், இன்று இரவு முதல்வர் விஜய் பகுபணா அளிக்கும் விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.
பாதுகாப்பு...
அரச தம்பதியினரின் வருகையையொட்டி டேராடூன், ரிஷிகேஷ் பகுதிகளில் பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளது. அங்கு, 600-க்கும் மேற்பட்ட போலீசாரும், ஏராளமான துணை ராணுவத்தினரும் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
சுற்றுப்பயணம்....
திருமணமான பின்னர் சார்லஸ்-கமீலா தம்பதியர் இந்தியாவில் மேற்கொள்ளும் நீண்டதொரு சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.