சபாஷ்... அபாரமான முகபாவனைகள்: கதகளியை பாராட்டிய இளவரசர் சார்லஸ்
திருவனந்தபுரம்: ஒன்பது நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் கேரளாவில் கதகளி நடனம் மற்றும் களறிபயட்டு ஆகிய கலைகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகனான இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் 9 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 6ம் தேதி தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் வந்து சேர்ந்த இவர்கள் வட மாநிலங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு, தற்போது கேரளா வந்துள்ளனர்.
நேற்று, கொச்சி அருகே தேவாரா என்ற இடத்தில் உள்ள பழங்கால கேரள கலைகளை விவரிக்கும், பழைமை வாய்ந்த மரம், கல் மற்றும் செம்பினால் செய்த கலை பொருட்களும், நகைகள், அணிகலன்கள், இசை கருவிகள், அரிய மருத்துவ குறிப்புகள், ஜோதிடம் தொடர்பான ரகசிய குறிப்புகள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்திற்கு பார்வையிடச் சென்றனர் சார்லஸ்-கமீலா தம்பதியினர்.
வரவேற்பு....
அவர்களை மாலை அணிவித்து வரவேற்ற அருங்காட்சியக உரிமையாளர்கள் அங்குள்ள பொருட்களின் பாரம்பரிய பெருமைகளை விளக்கி கூறினர். பின்னர் முதல் மாடியில் உள்ள நடன அரங்கத்திற்கு அவர்களை அழைத்து சென்றனர்.
லிப்ட் வேண்டாம்...
அரச தம்பதியினரை 'லிப்ட்' மூலம் செல்ல முயன்ற போது அதனை மறுத்த இளவரசர் சார்லஸ், தனது காலணிகளை கழற்றிவிட்டு, மாடிப்படி வழியாக ஏறி சென்றார்.
நடன நிகழ்ச்சிகள்....
கதகளி நடன கலைஞர்கள் 'நரகாசுரவதம்' காட்சிகளையும், களறிபயட்டு கலைஞர்கள் தங்களது திறமைகளையும் அரசு தம்பதியர் முன் அரங்கேற்றி காட்டினார்கள்.
நவரசம்....
அவற்றை கண்டு வியந்து மகிழ்ந்த இளவரசர் சார்லஸ், ‘நடனத்தின் போது இவ்வளவு அருமையான பாவங்களை உங்களால் எப்படி வெளி கொண்டுவர முடிகிறது? என வியந்து பாராட்டினார்.
ஆச்சர்யம்...
மேலும், ‘சுமார் 35 கிலோ எடையுள்ள நகைகளை அணிந்துக் கொண்டு நாட்டியமாடுவது சிரமமாக இல்லையா? என வியப்புடன் நடன கலைஞர்களைப் பார்த்து வியந்துள்ளார் சார்லஸ்.