வேன் டிரைவர் மது குடித்து வாகனம் ஓட்டியதற்காக பள்ளி முதல்வர் மீது வழக்கு
பெங்களூர்: பள்ளி வேன் டிரைவர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக அந்த பள்ளியின் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்த்துள்ளது காவல்துறை.
பெங்களூர் பள்ளியொன்றில் 6 வயது சிறுமி ஸ்கேட்டிங் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் நிறுவனர் கைது செய்யப்பட்டார். அதேபோன்று பள்ளி ஊழியர் செய்த தவறுக்காக முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவமும் பெங்களூரில் நடந்துள்ளது.
பள்ளி வேன்
பெங்களூர் சோமசுந்தரபாளையாவில் இயங்கிவரும், ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்றை ஆனந்த் (27) என்ற டிரைவர் ஓட்டி வருகிறார். நேற்று மாலையில் சுமார் 65 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, அந்த வேன் எச்எஸ்ஆர் லேவுட் கிளப் அருகே சென்றது.
பைக் மீது மோதல்
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் மோதியது. அந்த பைக் மீது உட்கார்ந்திருந்த மாதேஷ் என்பவர் இந்த விபத்தில் காயமடைந்தார்.
மது போதை
அப்பகுதி மக்கள் ஓடிவந்து வேன் டிரைவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். டிரைவரிடம் மது அருந்தியதற்கான சோதனையை போலீசார் மேற்கொண்டபோது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தது உறுதியானது.
பள்ளி முதல்வர் மீது வழக்கு
இதையடுத்து, பள்ளி ஊழியர்களை நியமித்ததில் மெத்தனமாக இருந்ததற்காக, பள்ளியின் முதல்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருப்பினும் அவரது பெயரை வெளியிட மறுத்துவிட்டனர். இந்த சம்பவம் பள்ளி நிர்வாகங்கள் மத்தியில் எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது.