ரூபாய் நோட்டு இப்போதான் பிரிண்ட் ஆகுது.. லேட்டாகத்தான் வரும்.. அருண் ஜேட்லி ஒப்புதல்
டெல்லி: புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சிட்டு முழுமையாக புழக்கத்திற்கு வருவதற்கு, தாமதம் ஆகும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற ஆங்கில பத்திரிகையொன்றின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற அருண் ஜேட்லி இவ்வாறு கூறி கலக்கத்தை ஏற்படுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பண புழக்கத்தில் 86 சதவீதம், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தன. எனவே அதை ஈடுகட்டும் அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க கால தாமதம் ஏற்படும். அதேநேரம், நீண்ட கால பயன்பாட்டுக்கு ரொக்கமற்ற பரிவர்த்தனை அவசியம்.
ஏடிஎம் கியூவில் நிற்கும் மக்களிடம் போய் நீங்கள் கேட்டீர்கள் என்றால், ஆம்.. எங்களுக்கு கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால், வருங்கால நலனுக்காக கியூவில் நிற்கிறோம் என்றுதான் சொல்வார்கள். யாரும் கலகத்தில் ஈடுபடமாட்டார்கள். இவ்வாறு ஜேட்லி தெரிவித்தார்.
ஜேட்லி ஏற்கனவே அளித்த பேட்டியொன்றில், பண நிலைமை சரியாக 6 மாதங்களாவது ஆகும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.