எப்படிங்க.. 7 செமீ நீளம்.. எப்படி விழுங்க முடியும்.. ஒன்னுமே புரியலையே ராமச்சந்திரா!
கைதி ஒருவர் செல்போனை விழுங்கி உள்ளார்.
கொல்கத்தா: அட ராமச்சந்திரா... இன்னும் யாராலும் நம்பவே முடியவில்லை... இது எப்படி நடந்து இருக்கும் என்று?!!
கொல்கத்தாவில் உள்ள பிரெஸிடென்சி சிறையில்தான் இந்த சம்பவம் நடந்து உள்ளது. நேற்று முன்தினம் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வந்தனர். அப்போது ஒவ்வொரு அறையாக ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த கைதிகளையும் தங்களது எக்ஸ்ரே கண்ணால் ஒரு லுக் விட்டவாறே நகர்ந்தனர்.
சந்தேகம் எழுந்தது
அப்போது ராமச்சந்திரா என்ற கைதியை பார்த்த சிறை அதிகாரிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு இடத்தில் ராமச்சந்திரனால் நேராக நிற்க முடியவில்லை. அசாதாரணமாகவே இருந்தார். அவரது செயல்களும் நார்மலாக இல்லை. இதனால் அதிகாரிகளுக்கு ராமச்சந்திரன் மீது சந்தேகம் வந்தது.
தாறுமாறான நடவடிக்கை
உடனே கூப்பிட்டு உடலில் ஏதாவது பொருட்களை மறைத்து இருக்கிறாரா என்ன, ஏதென்று சோதனை போட்டனர். ஆனால் ஒன்றுமே கிடைக்கவில்லை. விசாரித்ததில், ராமச்சந்திரன் பிக்பாக்கெட், வழிப்பறி பேர்வழி என தெரியவந்தது. இருந்தாலும் ராமச்சந்திரன் மீது சந்தேகம் அதிகாரிகளுக்கு போகவே இல்லை. "ஆள் தாறுமாறாக நடந்து கொள்கிறாரே" என்று அதிகாரிகள் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டனர்.
எக்ஸ்ரே எடுத்தனர்
அன்றைய தினம் இரவே ராமச்சந்திரனுக்கு வயிற்று வலி வந்துவிட்டது. வலியால் கத்தியதில் சிறை வளாகமே அதிர்ந்து போய்விட்டது. இதனால் அவரை அரசு மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்கள். டாக்டர்கள் சாதாரண வயிற்று வலி என நினைத்துவிட்டனர். பிறகுதான் நிலைமை சீரியஸ் போல இருக்கு என்று நினைத்து, ராமச்சந்திரனுக்கு உடனடியாக ஒரு எக்ஸ்ரே எடுக்க சொன்னார்கள்.
வாயை பிளந்தனர்
அதன்படி எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, டாக்டர்கள் ஆவென வாயை பிளந்து உட்கார்ந்து விட்டார்கள். காரணம், ராமச்சந்திரன் வயிற்றுக்குள் ஒரு செல்போன் இருந்திருக்கிறது. சிறை அதிகாரிகள் திடீர் சோதனைக்கு ரவுண்ட்ஸ் வரும்போது, ராமச்சந்திரன் கையில் செல்போனுடன் இருந்திருக்கிறார். அதிகாரிகள் கிட்ட வரவும், கையிலிருந்த செல்போனை வாய்க்குள் போட்டு விழுங்கியும் உள்ளார். அதனால்தான் அதிகாரிகள் வந்தபோது அந்த நெளி நெளிந்திருக்கிறார். செல்போனை விழுங்கியதில் இருந்தே ராமச்சந்திரனுக்கு வயிற்று வலி வந்துவிட்டது.
இன்னமும் ஷாக்
இதனால் அரசு மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு ராமச்சந்திரா மாற்றப்பட்டுள்ளார். சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குடல் வழியாக செல்போனை வெளியில் எடுக்க முயற்சி செய்கிறார்களாம். இல்லாவிட்டால் ஆபரேஷன்தானாம். இதுகுறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் 7 செ.மீ. அளவுடைய செல்போனை ராமச்சந்திரா எப்படி விழுங்கியிருப்பார் என்று 2 நாளாக சிறைத்துறை, மருத்துவமனை என அனைத்து வட்டாரங்களும் ஷாக்கிலேயே இன்னமும் உள்ளது!!