“முதல்வரைக் கொல்வேன்”... சிறையிலிருந்தபடியே பேஸ்புக்கில் மிரட்டல் வீடியோ வெளியிட்ட கைதி!
சிறையில் இருந்தபடியே முதல்வருக்கு கைதி கொலை மிரட்டல் வீடியோ ஒன்றை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
சண்டிகர்: பஞ்சாபில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர், 'முதல்வரைக் கொல்லப் போவதாக’ மிரட்டல் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில முதல்வராக அம்ரீந்தர் சிங் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அம்மாநில ஃப்ரீத்கோட் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி கோபிந்த் சிங் (32) என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், 'முதல்வர் அம்ரீந்தர் சிங் ஊழலையும், போதைப் பொருள் கடத்தலையும் ஒழிப்பேன்; இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிப்பேன் என முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். எனினும், அவர் அதை நிறைவேற்றவில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்யான வாக்குறுதி அளித்த அம்ரீந்தர் சிங்கின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இதற்கான, கவுன்ட்டவுன் துவங்கி விட்டது.
அரசியல்வாதிகள் இளைஞர்களை போதையின் பாதைக்கு திருப்பி விடுகின்றனர். சிறைச்சாலைகளில் போதைப் பொருள்கள் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. சிறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சிறைத்துறை அதிகாரிகள் குருகிரந்த் சாஹிப் புத்தகத்துக்கு உரிய மரியாதை தர வேண்டும்’ என கோபிந்த் சிங் பேசியுள்ளார்.
முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள இந்த வீடியோவை, சிறையில் இருந்தபடியே மொபைல் போனில் பேசி கோபிந்த் சிங் பதிவு செய்துள்ளார். பேஸ்புக்கில் வீடியோ வெளியாகி 24 மணி நேரங்களுக்கு பிறகே, அது குறித்து போலீசாருக்குத் தெரிய வந்துள்ளது. சுமார் 3 நிமிடம் ஓடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
சிறைக்குள், கைதிக்கு மொபைல் போன் எப்படி கிடைத்தது என்ற கேள்வியை பலர் எழுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோபிந்தின் அறையை சோதனை செய்த சிறை அதிகாரிகள், அங்கிருந்த செல்போன் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை வழக்கு ஒன்றிலும், கொலை முயற்சி வழக்கு ஒன்றிலும் சிக்கியுள்ள கோபிந்த் கடந்த மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.