பாரபட்சம் பார்க்காமல் வேட்பாளர்களுக்கு கோடி கோடியாக தந்து தனியார் நிறுவனங்கள் 'கவனிப்பு'!
டெல்லி: இந்திய அரசியல்வாதிகளை யார் நம்புவார்கள் என்று பொதுமக்கள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், தனியார் நிறுவனங்கள் அவர்களை நம்பி கோடி கோடியாக கொட்டிக் கொடுத்துள்ளன.
வேட்புமனு பட்டியலில் தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத்தான் இதுபோன்ற நிதியை தனியார் நிறுவனங்கள் அளித்துள்ளன. வேட்பாளர்களின் வேட்புமனு பட்டியலில் இருந்து இந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
லட்சத்திலிருந்து கோடிகள்
வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 'நிதி' ரூ.50 லட்சத்தில் இருந்து, ரூ.16 கோடி வரையிலுமாக உள்ளது. மும்பையை சேர்ந்த வீட்டு வசதி வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு நிறுவனமும், பெங்களூரை சேர்ந்த சலார்புரியா, மற்றும் ஷோபா டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களும், இதில் முக்கியமானவை.
பாகுபாடே கிடையாது
கட்சி வேறுபாடுகளை மறந்து அனைத்துக்கட்சியினருக்கும் தனியார் நிறுவனங்கள் தேர்தல் செலவுக்கு நிதி அளித்துள்ளன. பாஜகவின் நிதின் கட்கரி, கோபிநாத் முண்டே, காங்கிரசின் அம்பிகா சோனி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ராப்ரிதேவி, டிஆர்எஸ் கட்சியின் சந்திரசேகரராவ் ஆகியோர் தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கியோர்களில் முக்கியமானவர்கள்.
ஹேமமாலியிடமே பணம் இல்லையாம்..
இதில் பெரும்பாலான அரசியல்வாதிகளின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் உள்ளது. இருப்பினும் அவர்கள் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். பாஜகவின் மதுரா தொகுதி வேட்பாளரான சினிமா நடிகை ஹேமமாலினியும் கூட சகாரா இந்தியா டிவி நிறுவனத்திடமிருந்து ரூ.5 கோடியை கடனாக பெற்றுள்ளார். ரகஜா டெவலப்பர்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.2.5 கோடியை கடனாக பெற்றுள்ளார் காங்கிரசின் முன்னாள் மத்திய அமைச்சரான அம்பிகா சோனி.
இவரும் சேர்ந்துட்டாரா..
ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிய காரணமாக இருந்த சந்திரசேகரராவ், பெரும் புரட்சியாளராக அறியப்பட்டவர். ஆனால் அவரும் பிரத்மா, விசாகா போன்ற தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.3 கோடியை கடனாக பெற்றுள்ளாராம். எதிர்காலத்தில் இவர்களால் தங்களுக்கு கிடைக்கப் போகும் லாபத்தை மனதில் வைத்தே இந்த நிறுவனங்கள் இந்த அரசியல்வாதிகளை கவனித்துள்ளன.