சிகிச்சைக்காக நாளை யாரும் பெங்களூர் போய் விடாதீர்கள்.. தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்
இந்திய மருத்துவ கழகத்தின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தில் நவம்பர் 3ம் தேதி மட்டும் மருத்துமனைகள் இயங்காது என்று கர்நாடகத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் தெரிவித்து இருக்கின்றன.
பெங்களூர்: இந்திய மருத்துவ கழகத்தின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தில் நவம்பர் 3ம் தேதி மட்டும் மருத்துமனைகள் இயங்காது என்று கர்நாடகத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. கர்நாடக அரசு இயற்ற இருக்கும் கட்டண நிர்ணயம் தொடர்பான சட்டத்திற்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு சில நாட்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி கர்நாடகாவில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யும் முடிவை அறிவித்து இருக்கிறது. எந்தெந்த நோய்களுக்கு என்ன விதமான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வரையறை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த சட்டம் வரும் கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதையடுத்து அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் கர்நாடக கிளை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்யக் கோரி அழைப்பு விடுத்து இருந்தது. இதையடுத்து வரும் நவம்பர் 3ம் தேதி கர்நாடகாவில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான 50,000 எண்ணிக்கையிலான மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த இடங்களும் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்படி மெடிக்கல்கள், ஸ்கேன், ஈசிஜி எடுக்கும் இடங்கள், நர்சிங் ஹோம்கள் என எதுவும் செயல்படாது. அதேநேரம், மிகவும் மோசமான நிலையில் வரும் அவசர நிலை நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்க்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
மருத்துவர்கள் இது குறித்து கூறும் போது "இந்த சட்டம் தனியார் மருத்துவமனையில் வேலை செய்பவர்களை வஞ்சிக்கிறது. எங்களுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமாயாவை சந்தித்து பார்த்து பேச வேண்டும். அதற்காகத்தான் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை செய்ய முடிவு செய்து இருக்கிறோம்'' என்று கூறினார்கள்.