நாடு முழுக்க சிஏஏ பற்றி பேசுகிறீர்கள்.. அசாமில் வாய் திறக்காதது ஏன்? பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி
திஸ்பூர்: நாடு முழுவதும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவது குறித்துப் பேசும் பாஜக, அசாம் மாநிலத்தில் அச்சட்டத்தைப் பற்றி வாய் திறக்காதது ஏன் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அசாம் சட்டமன்றத்திற்கு வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு அரசியல் தலைவர்களும் அசாம் மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக தற்போது அசாம மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த முறை பாஜகவிடம் இழந்த அசாம் மாநிலத்தில் மீண்டும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது
பிரியங்கா காந்தி பிரச்சாரம்
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இரண்டு நாள் பயணமாக அசாம் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். இன்று அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, " உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நாட்டின் ஒற்றுமை மற்றும் அசாமின் ஒற்றுமை ஆகியவற்றில் பிரச்னை உள்ளது.
வாய் திறக்கவில்லை
அவர் நாடு முழுவதும் சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டங்கள் பற்றிப் பேசியுள்ளார். ஆனால் அசாம் மாநிலத்தில் மட்டும் இது குறித்துப் பேசாமல் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பு, அசாமில் என்ஆர்சி செயல்படுத்தப்படாது என்று பாஜக கூறியிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது என்ன ஆனது?" என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார்.
சிஏஏ போராட்டம்
மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு சிஏஏ சட்டத்தை கொண்டுவந்தது. இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதிலும் குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்தப் போராட்டம் மிகப் பெரியளவில் நடைபெற்றது. இந்தச் சட்டம் தங்களின் அடையாளத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். அசாம் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் சிலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
சிஏஏ அமல்படுத்தப்படாது
தொடர்ந்து பஜாகவை தாக்கிப் பேசிய பிரியங்கா காந்தி, "நிலத்தையும் அடையாளத்தையும் காப்பாற்ற அசாம் மக்கள் போராடுகிறீர்கள். இந்த மாநிலத்தின் 'ஜெய் அசாம்' என்ற முழக்கத்தை பாஜக தனது காப்ரேட் நண்பர்களுடன் இணைந்து அடக்க முயல்கிறது. இங்கு இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால் பாஜக விமான நிலையங்களையும் எண்ணெய் வயல்களையும் தொழிலதிபர்களுக்கு அரசு விற்கிறது. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் நிச்சயம் சிஏஏ அமல்படுத்தப்படாது" என்றார்.