காவிரி: உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கன்னட அமைப்புகள் நாளை மீண்டும் 'பந்த்'
பெங்களூரு: காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கன்னட அமைப்புகள் நாளை மீண்டும் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி வரை 12 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு இன்று உத்தரவிட்டது. இதனையடுத்து கர்நாடகத்தில் பதற்றம் நிலவி வருகிறது.
பெங்களுரூ, மைசூரு உள்ளிட்ட முக்கிய நகரில் உள்ள தமிழர்கள் கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. தீ வைத்து கொளுத்தப்படுகின்றன. தொடர்ந்து அங்கு தமிழர்கள் சொத்துக்கள் குறி வைத்து தாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கன்னட அமைப்புகள் நாளை கர்நாடகம் முழுவதும் மீண்டும் பந்த் நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் கடந்த 2 வாரங்களில் நடத்தப்படும் 3-வது பந்த் இது. முதலில் மாண்டியாவில் மட்டும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 9-ந் தேதியன்று கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.