காலாவை வெளியிடும் நிறுவன அலுவலகம் சூறையாடல்.. கன்னட அமைப்புகள் போர்க்கொடி
கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட இருக்கும் சி நிறுவனத்தின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட இருக்கும் சி நிறுவனத்தின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் நடிகர் ரஜினி. நாளை உலகம் முழுக்க காலா படம் வெளியாக உள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படம் உலகம் முழுக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
ஆனால் கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகிறது.
கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்தை ஆதரித்ததற்காக ரஜினி படத்திற்கு இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் காலாவை வெளியிட போவதாக சி நிறுவனம் தெரிவித்தது.
கர்நாடகாவில் சி நிறுவனம் என்ற பிரபல சினிமா நிறுவனம் காலாவை வெளியிட உள்ளது. காலாவை மொத்தம் 150 தியேட்டர்களில் வெளியிட உள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.
இதனால் இன்று மாலை சி நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் கன்னட அமைப்புகள் புகுந்து தகராறு செய்தனர். அலுவலகத்தில் இருந்த காலா பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது. காலா படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர்.
100க்கும் அதிகமானோர் அங்கு திரண்டு கோஷம் எழுப்பி வருகிறார்கள்.காலாவை கர்நாடகாவில் வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடபட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.