சரிதா நாயரின் ரூ. 2 கோடி லஞ்சப் புகார்... முதல்வர் பதவியிலிருந்து விலகுகிறாரா உம்மன் சாண்டி?
திருவனந்தபுரம்: சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி எந்த நேரமும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால் கேரள அரசியலில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது அங்கு காங்கிரஸைச் சேர்ந்த உம்மன்சாண்டி (73) முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், சோலார் பேனல் ஊழல் விவகாரத்தில் அவரிடம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்ததாக, முக்கியக் குற்றவாளியான சரிதா நாயர் (42) அளித்துள்ள வாக்குமூலம் உம்மன்சாண்டியின் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எந்நேரமும் அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு அங்கு நிலவுகிறது.
டீம் சோலார்...
கடந்த 2013ம் ஆண்டு பிஜு ராதாகிருஷ்ணன் என்பவரும், அவரின் மனைவி சரிதா நாயரும் 'டீம் சோலார்' என்ற பெயரில், சூரிய மின் உற்பத்தி நிறுவனத்தை துவக்கினர். அதன் மூலம், மாநிலம் முழுவதும் சூரிய மின் சக்தி அமைப்புகளை துவக்க அனுமதி வழங்குவதாக அவர்கள் பலரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தனர்.
போலீசில் புகார்...
ஆனால், சொன்னபடி அவர்கள் கான்ட்ராக்ட் வழங்காததால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சரிதா நாயர் மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முதல்வரின் உதவியாளர்கள்...
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த ஊழலில் அரசியல் தலையீடு இருந்ததும் அம்பலமானது. கேரள முதல்வர் உம்மன்சாண்டியின் உதவியாளர்கள் பலமுறை சரிதாவுடன் பேசியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சரிதாவின் ஆபாச வீடியோ...
இதற்கிடையே, ரகசியமாகப் படமெடுக்கப்பட்ட சரிதாவின் படுக்கையறைக் காட்சிகள், ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ரகசிய வாக்குமூலம்...
சோலார் பேனல் ஊழல் தொடர்பாக நீதிபதி சிவராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்படுகிறட்டு வருகிறது.
முதல்வரிடம் விசாரணை...
இந்த விவகாரம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் உம்மன்சாண்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் பேசியது திருப்தியளிக்காததால், அவரிடம் உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், அதற்கு ஒத்துழைக்க அவர் மறுத்துவிட்டார்.
சரிதாவின் வாக்குமூலம்...
இந்த சூழ்நிலையில், கொச்சியில் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் நேற்று முன்தினம் ஆஜரானார். அப்போது அவர், "உம்மன் சாண்டியின் தனிச் செயலரான ஜிகுமோன் ஜேக்கப்பை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். அப்போது அவர் உம்மன் சாண்டி ஏழு கோடி ரூபாய் கேட்பதாகத் தெரிவித்தார். அதற்கு நான் மறுத்து விட்டேன். எனினும், ஜேக்கப் கூறியபடி டெல்லியில் உம்மன் சாண்டியின் தனிச் செயலர் தாமஸ் குருவில்லாவை சந்தித்து பேரத்தை முடிவு செய்தேன்.
முதல்வருக்கு லஞ்சம்...
அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் தாமஸ் குருவில்லா வீட்டில், ஜேக்கப் முன்னிலையில் முதல் தவணையாக 1.10 கோடி ரூபாய் கொடுத்தேன். இரண்டாவது தவணையாக, 80 லட்சம் ரூபாய் தந்தேன்; இதை என்னால் நிரூபிக்க முடியும்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சட்டசபைத் தேர்தல்...
இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேரள முதலமைச்சர் மீது சரிதா நாயர் கூறிய ஊழல் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் குற்றச்சாட்டு...
இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என ஆளும் தரப்பு கூறுகிறது. காரணம் இதற்கு முன் விசாரணைக் கமிஷனிடம் எத்தனையோ முறை ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார் சரிதா நாயர். ஆனால், அவற்றில் ஒருமுறை கூட இத்தகைய குற்றச்சாட்டை அவர் கூறவில்லை. சட்டசபை விரைவில் நடக்கவுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் மீது அவர் இத்தகைய குற்றச்சாட்டைக் கூறுவது தேர்தலை முன்னிருத்தி நடத்தப்படும் சதியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நெருக்கடி...
ஆனால், சரிதாநாயரின் புகாரைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஆர்.எஸ்.பி கட்சியின் எம்.எல்.ஏ. கூவூர் குஞ்சுமோன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால், சாண்டி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வழக்குப் பதிய அனுமதி...
இந்த சூழ்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மாநில அரசின் கட்டுப் பாட்டில் செயல்படும் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம், 'முதல்வர் சாண்டி மற்றும் மின் அமைச்சர் முகமது ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதேபோல், அம்மாநில திருச்சூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் உம்மன்சாண்டி மீது வழக்குத் தொடர நீதிபதி அனுமஹ்டி அளித்துள்ளனர்.
போராட்டம்...
இதனால், உம்மன்சாண்டியை பதவி விலக வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து பாஜக உள்ளிட்ட கட்சிகளும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டன. தலைநகர் திருவனந்தபுரம் மற்றும் பிற நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை நிகழ்ந்தது. போலீசார் தடியடி, கண்ணீர்புகை குண்டுகளை வீசி, கும்பலை கலைத்தனர்.
பரபரப்பு...
கோழிக்கோடுக்கு ரயிலில் வந்த உம்மன்சாண்டியை வண்டியிலிருந்து இறங்க விடாமல், மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்.
தந்தை போன்றவர்...
இந்த விவகாரம் தொடர்பாக உம்மன்சாண்டி கூறுகையில், ‘கடந்த 2014ல் சரிதா நாயர் கூறும் போது, 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பத்து கோடி ரூபாய் கொடுத்து, ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சித்தது' என கூறினார். அதன் மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுபோல, சில மாதங்களுக்கு முன் கூட, 'முதல்வர் சாண்டி எனக்கு தந்தை போன்றவர்; அவர் மீது எந்த குற்றமும் கிடையாது' என, சரிதாகூறியிருந்தார்.
அரசியல் சூழ்ச்சி...
இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு என்ன நேர்ந்தது என தெரியவில்லை. என் அரசை கவிழ்க்கவேண்டும் என்பதற்காக நடைபெறும் அரசியல் சூழ்ச்சி தான் இது. என் மீது சரிதா இப்போது கூறும் புகார்களில் உண்மையில்லை; உண்மை வெளிவந்தே தீரும்; நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.
மதுபான பார் உரிமையாளர்கள்...
இந்த விவகாரத்தில் மதுபான பார் உரிமையாளர்கள் பின்னணியில் உள்ளனர் என கருதுகிறேன். ஏனெனில், மதுபான பார்கள் இழுத்து மூடப்பட்டதால் தொழில் இழந்து போயுள்ள அவர்கள், இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்த வழக்கு, அனைத்து நீதிமன்றங்களிலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த சூழ்ச்சியில் இறங்கியுள்ளனர்.
ராஜினாமா செய்வேன்...
என் மீதான புகார்கள் நிரூபிக்கப்படுமானால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது மட்டுமல்ல. அரசியலில் இருந்தே விலகவும் தயார்" என அவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் நெருக்கடி...
ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முதலமைச்சர் உம்மன்சாண்டியும், அமைச்சர் முகம்மதுவும் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியும், பாஜகவும் வலியுறுத்தி வருகிறது.
ராஜினாமா முடிவு...
இதனால் உம்மன்சாண்டியின் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதால் கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.