உலகம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாராம் ரோகித் .. விசாரணை அறிக்கை!#rohitvemula
ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெர்முலா தற்கொலைக்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை என்றும் அது சாதாரண விரக்தியால் நடந்தது என்றும் விசாரணை கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் ரோகித் வெர்முலா தலித் அல்ல என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷனின் இந்த அறிக்கையால் புதிய புயல் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ரோகித் வெமுலா. இவர் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தனது அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பெரும் கொதிப்பையும் ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர்களான பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஸ்மிருதி இராணி (அப்போது மனித வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்மிருதி) ஆகியோர்தான் ரோகித்தின் தற்கொலைக்குக் காரணம் என சர்ச்சை வெடித்தது. இதையடுத்து போராட்டங்களும் வெடித்தன.
இதையடுத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷனை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியத் தகவல்கள்:
- ரோகித் வெமுலா தலித் வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல.
- தனக்குத் தானே தலித் என்று அறிவித்துக் கொண்டார் ரோகித்தின் தாயார் ராதிகா.
- அரசின் சலுகைகளைப் பெறுவதற்காக இவ்வாறு அறிவித்தார் ராதிகா.
- ஆவணங்களின்படி ராதிகா வடேரா என்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்வது போல மாலா சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை.
- ரோகித் எந்த வகையிலும் பாரபட்சமாக நடத்தப்படவில்லை.
- பல்கலைக்கழக விடுதியிலிருந்து நீக்கப்பட்டதற்கும், அவரது தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை.
- உரிய காரணத்துடன்தான் ரோகித் விடுதியிலிருந்து நீக்கப்பட்டார்.
- தனிப்பட்ட விரக்திதான் ரோகித்தின் தற்கொலைக்கு முக்கியக் காரணம்.
- எம்எல்சி ராமச்சந்திர ராவ், அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இராணி ஆகியோர் இதற்குக் காரணம் இல்லை.
- தற்கொலைக் கடிதத்தில் உலக நடப்புகளே தனது முடிவுக்குக் காரணம் என்றுதான் எழுதியுள்ளார் ரோகித் வெமுலா.
- தற்கொலைக் கடிதத்தில் அவர் யாரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை.
- இந்த உலகில் வாழப் பிடிக்காமல் அவர் தற்கொலை செய்திருப்பதாகவே தெரிகிறது