தூர்தர்ஷன் செய்திகளில் சர்ச்சையை எழுப்பிய "பிழைகள்' ..விசாரணைக் குழு நியமனம்
டெல்லி: தூர்தர்ஷனில் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பான செய்திகளில் இடம்பெற்ற பிழைகளினால் சர்ச்சைகள் எழும்பின. இந்தப் பிழைகள் குறித்து விசாரிக்க 2 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சீனா அதிபர் ஜீ ஜின்பிங் அண்மையில் இந்தியா வருகை தந்த போது ஒளிபரப்பான செய்தியில், அவரது பெயரை "11ஆவது ஜின்பிங்' என்று செய்தி வாசிப்பாளர் தவறுதலாகப் படித்துவிட்டார். சீன அதிபரின் பெயரின் முன் பகுதியில் உள்ள "ஜீ' என்பதற்கான "எக்ஸ்', "ஐ' என்ற ஆங்கில எழுத்துக்களை, கணிதத்தில் "11' ஆம் எண்ணைக் குறிக்கும் ரோமன் எழுத்துருவாகக் கருதிக்கொண்டு அந்தச் செய்தி வாசிப்பாளர் கவனக்குறைவாக வாசித்து விட்டார்.
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணத்தின் வெளியான மற்றொரு செய்தித் தொகுப்பில், மோடி இடம்பெற வேண்டிய காட்சிக்குப் பதில், முந்தைய பிரதமர் மன்மோகன் இடம்பெற்ற காட்சிகள் ஒளிபரப்பாகின.
அதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தொடர்பான ஒரு செய்தித் தொகுப்பில் தூர்தர்ஷன் செய்தியாளர் ஒருவர், "சங்கராச்சாரியார் மலை', "அனந்த் நாக்' ஆகிய பகுதிகளின் பெயருக்குப் பதிலாக வேறு பெயர்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து மக்கள் மத்தியிலும், சமூக வலைத் தளங்களிலும் தூர்தர்ஷன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அந்தப் பிழைகள் குறித்து விசாரிக்க 2 பேர் கொண்ட தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குக் காரணமான தவறுகள் குறித்து விசாரித்து, இனிவரும் காலங்களில் அதுபோன்றவற்றைத் தவிர்ப்பது குறித்த வழிமுறைகளைக் கண்டறியும் பணியை, இந்தக் குழு மேற்கொள்ளும் என்று தூர்தர்ஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.