ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியம் கசிந்தது எப்படி.. அறிக்கை கேட்டார் மனோகர் பாரிக்கர்
டெல்லி: ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலின் போர் திறன் தொடர்பான அனைத்து ரகசியங்களும் எப்படி கசிந்தன என்பது குறித்து அறிக்கை ஒன்றை தாக்க செய்ய இந்திய கடற்படையிடம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஸ்கார்பீன் என்ற நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா வாங்கியுள்ளது. இந்தக் கப்பல் விரைவில் இந்தியக் கடற்படையில் ஒருங்கிணைக்கப்பட உள்ள நிலையில், "தி ஆஸ்திரேலியன்" என்ற நாளிதழ் இந்தக் கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்திய கடற்படையின் மிகவும் சக்தி வாய்ந்த போர்க் கப்பலாக இந்தக் கப்பல் விளங்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இந்தச் செய்தி இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
22,400 பக்கங்கள் கொண்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பலின் ஆவணங்கள் கசிந்துள்ளதாக "தி ஆஸ்திரேலியன்" செய்தி வெளியிட்டுள்ளது. இவற்றில் 4,457 பக்கங்களில் நீர்மூழ்கிக் கப்பலின் கடலுக்கடியில் செயல்படும் சென்சார் குறித்தும், 4,209 பக்கங்களில் நீருக்கு மேல் செயல்படும் சென்சார்கள் குறித்தும், 4,301 பக்கங்களில் போர் யுக்திகள் குறித்தும், 6,841 பக்கங்களில் தொலை தொடர்புகள் குறித்தும், 2,138 பக்கங்களில் நேவிகேஷன் கட்டமைப்பு குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தக் கப்பல் குறித்த தகவல்கள் இந்தியாவிற்காக கடந்த 2011ம் ஆண்டு பிரான்ஸ் அரசால் கணினியில் தொகுக்கப்பட்டது என்றும், அதே ஆண்டு டிசிஎன்எஸ் நிறுவனத்தின் சப் காண்ட்ராக்ட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரால் இந்த ஆவணம் கசிந்திருக்கலாம் என்றும் "தி ஆஸ்திரேலியன்" பத்திரிகை தெரிவித்துள்ளது.