எழுத்தாளர் கல்பர்கி கொலை: சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு பரிந்துரை
பெங்களூர்: எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி கொலை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைக்கும் வகையில் கர்நாடக அரசு பரிந்துரைத்துள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கர்நாடக மாநிலம், ஹூப்ளியின் இரட்டை நகர் தார்வார். இந்த நகரின் கல்யாண் நகர் பகுதியில் வசித்தவர் எம்.எம்.கல்பர்கி. முற்போக்கு எழுத்தாளராக அறியப்பட்டவர். நேற்று காலை 8.40 மணியளவில் இவர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
பைக்கில் வந்த இரு நபர்களில் ஒருவர் கல்பர்கி வீட்டுக்குள் சென்று சுட்டுள்ளார். மற்றொரு நபர் வெளியே பைக்கை கிளப்பி தயாராக நின்றுள்ளார். கொலை நடந்ததும், இரு கொலையாளிகளும் தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து கர்நாடக போலீஸ் டிஜிபி, ஓம்பிரகாஷ் கூறுகையில், தார்வார், துணை கமினர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது என்றார்.
இந்நிலையில், வழக்கு விசாரணையை சி.ஐ.டியிடம் கொடுத்துள்ளதாக மாநில முதல்வர் சித்தராமையா இன்று காலை அறிவித்தார். இந்நிலையில், வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு, இதை விசாரிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக மாலையில் சித்தராமையா அறிவித்தார்.