உளவுத்துறை எச்சரித்தும், கல்பர்கிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது ஏன்?
பெங்களூர்: உளவுத்துறை எச்சரிக்கையையும் மீறி, தனக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை எழுத்தாளர் கல்பர்கி உதறியுள்ள தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது. இதன்காரணமாக இன்று அவரது உயிர் பரிதாபமாக பறிபோயுள்ளது.
கன்னட எழுத்தாளர்கள் யு.ஆர்.அனந்தமூர்த்தி மற்றும் கல்பர்கி ஆகியோர் இந்துக்களுக்கு எதிராக அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை கூறிவந்தவர்கள். கடந்த ஆண்டு, அனந்தமூர்த்தி இந்து கடவுள்கள் குறித்து கடுமையான விமர்சனம் ஒன்றை கூறினார்.
போராட்டம்
அனந்தமூர்த்தி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரிலுள்ள அவரது வீட்டின் எதிரே, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்நிலையில், அனந்தமூர்த்தி கருத்தை வரவேற்று கல்பர்கியும் கருத்து கூறினார். இதையடுத்து ஹூப்ளி-தார்வார் நகரிலுள்ள கல்பர்கி வீட்டிலும் இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
தொடர்ந்து போலீஸ் காவல்
இதையடுத்து கல்பர்கி வீட்டில் எப்போதுமே குறைந்தது 4 போலீசாராவது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். சுமார் 3 மாதகாலமாக தொடர்ந்து இவ்வாறு போலீசார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பாதுகாப்பை கல்பர்கி விரும்பவில்லை என்று தெரிகிறது.
விரும்பி கேட்டார்
எனவே, தனது பாதுகாப்பை விலக்குமாறு, தார்வார் போலீஸ் கமிஷனருக்கு எழுத்துப்பூர்வமாக கல்பர்கி வேண்டுகோள்விடுத்தார். இதையடுத்து கடந்த ஓராண்டாக கல்பர்கிக்கு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. தார்வார் போலீஸ் கமிஷனர் ரவீந்திர பிரசாத்தும் இதை உறுதி செய்துள்ளார்.
கமிஷனர் ஒப்புதல்
உளவுத்துறை தகவல்படி, கல்பர்கி உயிருக்கு ஆபத்து இருந்தது. எனவேதான், நாங்கள் கல்பர்கியை பாதுகாப்பை விலக்க கோரிக்கைவிடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டோம். பேசிப்பார்த்தும் அவர் சம்மதிக்காததால்தான் பாதுகாப்பு விலக்கப்பட்டது என்றார்.
சொல்லியும் கேட்கவில்லை
கல்பர்கியின் பக்கத்துவீட்டில் வசிக்கும் நண்பர்கள் கூறுகையில், பாதுகாப்பை விலக்க வேண்டாம் என்று நாங்கள் கூறியபோது, எது நடக்குமோ அது நடந்துதான் தீரும். என்னுடன் போலீசார் எப்போதுமே இருப்பது சவுகரியமாக படவில்லை என்று கூறியிருந்தார். சிசிடிவி பொருத்துமாறு கூறியதையும் அவர் கேட்கவில்லை. காவல்துறை பேச்சை கேட்காமல்தான் இப்படி உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.