மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது… “பொறுப்புமிக்க மனிதர்களுக்காக”பெற்றார் பூர்ணச்சந்திரன்
"சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் ‘பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக சாகித்ய அகாடமியின் விருதை எழுத்தாளர் பூர்ணச்சந்திரன் பெற்றார்.
டெல்லி: சாகித்ய அகாடமி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி, மைதிலி உள்பட 24 இந்திய மொழிகளில் வெளியான சிறுகதை, கவிதைகள், நாவல், கட்டுரை, திறனாய்வு அல்லது விமர்சனம் ஆகிய படைப்புகளில் சிறந்தவை தேர்வு செய்யப்பட்டு 2016ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
இதில், தமிழகத்தின் திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார். அதேபோல, 2016ம் ஆண்டுக்கான சிறந்த மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 22 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், "சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் 'பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக எழுத்தாளர் பூர்ணசந்திரன் பெற்றுள்ளார்.
இளம் வயது..
வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளநிலை அறிவியல் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர் பூரணச்சந்திரன். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றவர். மார்க்சிய சிந்தனையாளரான இவர் இதழியல் துறையிலும், மொழிபெயர்ப்பு பணியிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
மொழி பெயர்ப்பு
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராக பூரணச்சந்திரன் பணியாற்றியவர். பணி ஓய்விற்கு பின்னர் தீவிர மொழி பெயர்ப்பில் ஈடுபட்ட இவர், அருந்ததி ராயின் 'நொறுங்கிய குடியரசு', தனி நாயகம் அடிகளின் 'நில அமைப்பும் தமிழ் கவிதையும்' உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
விருதுகள்
இதுதவிர ஆந்திராவின் முக்கிய கவிஞரான வர வர ராவின் 'சிறைபட்ட கற்பனை'மற்றும் வெண்டி டோனிகரின் 'இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு'ஆகிய இரண்டு நூல்களுக்கும் ஆண்டுதோறும் ஆனந்த விகடன் வழங்கும் விருதுகளை பெற்றுள்ளது. மேலும், சல்மான் ருஷ்டியின் 'நள்ளிரவின் குழந்தைகள்' நூலுக்கு பாரதி இலக்கிய அமைப்பு விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது
எல்லாவற்கும் சிகரம் வைத்தாற்போல் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. "சீரியன் மென்' என்ற மனு ஜோசஃப் எழுதிய ஆங்கில நாவலை தமிழில் 'பொறுப்புமிக்க மனிதர்கள்' என்ற பெயரில் மொழியாக்கம் செய்ததற்காக எழுத்தாளர் பூர்ணசந்திரன் பெற்றார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் செப்பு பட்டயமும் அடங்கியது இந்த விருது.