பெங்களூருவில் 144 தடை உத்தரவு இன்று இரவு வரை நீட்டிப்பு- ஊரடங்கு உத்தரவும் நீட்டிப்பு
பெங்களூரு: வன்முறைகளைக் கட்டுப்படுத்த நேற்று முன்தினம் மாலை பெங்களூருவில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு கூடுதல் நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுதான் பாக்கி... தமிழர் நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்கினர் கன்னட அமைப்பினர்.
ஒரே நாளில் 52 பேருந்துகள், 35 லாரிகள் என 100க்கும் மேற்பட்ட தமிழக வாகனங்கள் தீக்கிரையாகின. இதனையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் எதனையும் பற்றி கவலைப்படாமல் கன்னட அமைப்பினர் போராட்டங்களைத் தொடர்கின்றனர். இதுவரை 312 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் 144 தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெங்களூருவில் 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.