தவறான தகவல் தந்தால் 2 ஆண்டு சிறை... வருகிறது வேட்பாளர்களுக்கான புதிய ‘செக்’
ஹைதராபாத்: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்தால் இரண்டாண்டு சிறை தண்டனை பெறும் திட்டத்தை சட்டமாக்க, சட்ட அமைச்சகம் நடவடிக்கை எடுத்துவருவதாக தலைமைத் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
விரைவில் தமிழகம், புதுவை, கேரளா உட்பட ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில், தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான, 12வது ஆண்டு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தலைமைத் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிரிமினல் விவரங்கள்...
பிரமாண பத்திரத்தில், கிரிமினல் தொடர்பு உள்ளிட்ட, அனைத்து தகவல்களையும், வேட்பாளர்களிடம் இருந்து பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. முழு தகவல்கள் அளிக்காவிட்டால், அது வாக்காளர்களுக்கு தீமையாக அமையும்.
2 ஆண்டு சிறை...
எனவே, வேட்பாளர்கள் பிரமாணப் பத்திரத்தில் தகவல்களை மறைக்க முயன்றாலோ, பொய் தகவல்களை அளித்தாலோ, அது, கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, இரண்டாண்டு சிறைத் தண்டனை அளிக்க வேண்டுமென, தேர்தல் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. இப்பரிந்துரையை, சட்ட அமைச்சகம் ஏற்று, சட்டமாக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அறக்கட்டளைகள்...
தேர்தல் செலவுகளுக்கான நிதியை பெற, அரசியல் கட்சிகள், அறக்கட்டளைகளை ஏற்படுத்துகின்றன. வெளிநாடுகளில் இருந்து, ஆதாயம் கருதி தேர்தல் அறக்கட்டளை கணக்கில் பணம் செலுத்தும் வாய்ப்புள்ளது.
தடை விதிக்க திட்டம்...
எனவே, தேர்தல் அறக்கட்டளைகளுக்கு தடை விதிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.