ரத்தாகும் தனி ரயில்வே பட்ஜெட்- பொதுபட்ஜெட்டுடன் இணைந்து தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை
டெல்லி: ரயில்வே துறைக்கு என தனியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது கைவிடப்பட்டு பொதுபட்ஜெட்டுடன் இணைந்து தாக்கல் செய்வது குறித்து நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டில் 1924-ம் ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் தனியே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சுதந்திரத்துக்குப் பின்னரும் மத்திய அரசின் பட்ஜெட் 2 பாகங்களாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.
முதலில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டும், அதன்பின் பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது. பொது மக்களின் பயணத்துக்காக அதிக அளவிலும், சரக்கு போக்கு வரத்துக்காக குறைவான அளவிலும் ரயில் சேவை பயன்படுத்தப்பட்டது.
அப்போது மத்திய பட்ஜெட்டில் ரயில்வேயின் பங்கு 70% என இருந்தது. தற்போது 15% என குறைந்துவிட்டது. தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் ரயில்வே துறை சிக்கியுள்ளது.
தற்போது 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தினால் மேலும் ரூ30,000 கோடி ரயில்வே துறைக்கு சுமை ஏற்படும். இதுபோன்ற காரணங்களால் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை சேர்த்துவிடுங்கள் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு நிதி அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நிதி அமைச்சகமும் இது தொடர்பாக பரிசீலித்து வருகிறது என்கின்றன டெல்லி தகவல்கள்.