குடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு.. பெரும் கலவரம்!
டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பேருந்துகள் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இப்போராட்டத்தை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.
மாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி!
தினமும்
போலீஸ் தடியடியும் மீறி மாணவர்களின் போராட்டம் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.
என்ன புகை
இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசி தடியடி நடத்தினர். இந்நிலையில் திடீரென பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின.
மாணவர்கள் மறுப்பு
இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப போலீசார் இப்படி புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம்
டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோசமான நிலை
அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.