டெல்லி, வடகிழக்கு, வங்கம்.. நாடு முழுக்க போராட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் குடியுரிமை சட்ட திருத்தம்!
குடியுரிமை போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவ தொடங்கி உள்ளது.
டெல்லி: குடியுரிமை போராட்டம் தற்போது நாடு முழுக்க பரவ தொடங்கி உள்ளது. முக்கியமாக வட இந்தியாவில் இந்த போராட்டம் உச்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரும் எதிர்ப்புக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமானது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இதற்கு எதிராக நாடு முழுக்க பல மாநிலங்களில் மாபெரும் போராட்டம் எழுந்துள்ளது. அங்கு சாலைகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அசாம் போராட்டம்
அசாம் மாநிலத்தில்தான் இந்த போராட்டம் முதலில் துவங்கியது. அங்குதான் தற்போது போராட்டம் விஸ்வருபம் எடுத்து வருகிறது. இந்த மொத்த போராட்டத்தின் தலைமையிடமே கவுகாத்திதான் என்று கூறலாம். அங்கு இதுவரை போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ல தடை
இதனால் அசாமில் மொத்தமாக இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு கடந்த 5 நாட்களாக இணையம் இல்லை. தொலைபேசி இணைப்புகளும் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தரைவழி, வான்வழி மற்றும் ரயில்வே போக்குவரத்து அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மற்ற வடகிழக்கு போராட்டம்
அதேபோல் மற்ற வடகிழக்கு மாநிலங்களிலும் போராட்டம் அதிகமாக நடந்து வருகிறது. திரிபுரா, மேகாலயாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான மககள சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். மேகாலயா பாஜக இது தொடர்பாக டெல்லி தலைமையிடம் புகார் அளித்துள்ளது. மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, அருண்சலப்பிரதேசம் மாநிலங்களில் நிமிடத்திற்கு நிமிடம் நிலைமை மோசமாகி வருகிறது.
மேற்கு வங்க கலவரம்
அதேபோல் இன்னொரு பக்கம் மேற்கு வங்கத்தில், பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் பல பேருந்து நிலையங்களில் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. மலடா, முரிஷாபாத், ஹவ்ரா, வடக்கு 24 பர்கானாஸ் , தெற்கு 24 பர்கான்ஸ் பகுதிகளில் அதிக அளவில் கலவரம் நடந்து வருகிறது. இதனால் அங்கு மொத்தமாக இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்கள் எப்படி
இன்னொரு பக்கம் வட இந்தியாவில் மும்பை, லக்னோ, பீகார் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. பீகாரில் மாணவர்கள் பலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்த போராட்டம் இன்னும் பரவவில்லை. ஒடிசாவில் சில இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. குஜராத்திலும் மாணவ அமைப்புகள் போராடி வருகிறார்கள்.
டெல்லி நிலை
டெல்லி தற்போது இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ளது. அங்கு பல இடங்களில் மாணவர்கள் சாலையில் இறங்கி போராடி வருகிறார்கள். ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயே அமைதியான முறையில் போராடி வருகிறார்கள். அதே ஜாமியா நகரில் சில மர்ம நபர்கள் மூன்று பேருந்துக்கு தீ வைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த போராட்டம் செய்யும் மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
தென் மாநிலங்கள் எப்படி
தென் மாநிலங்களில் பெங்களூரிலும், ஹைதபாரத்திலும் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. பெங்களூரில் இருக்கும் அசாம் மாணவர்கள் அமைப்பு மக்கள் அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடந்து வருகிறது.
தமிழகம் நிலை
தமிழகத்தில் இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடந்தது. அதை தொடர்ந்து அண்ணா சாலையில் சில இடங்களில் சென்னையில் போராட்டம். வடகிழக்கு மாணவர்கள் அமைப்புதான் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.