அமெரிக்கா அணு உலை அமைக்க "மோடி"யின் குஜராத்தில் எதிர்ப்பு! 152 கிராம மக்கள் மீண்டும் போர்க்கொடி!!
டெல்லி/பாவ்நகர்: அமெரிக்காவுடனான வர்த்தக அணுசக்தி தொடர்பான முட்டுக்கட்டைகள் நீங்கி ஒப்பந்தங்களை போட்டுவிட்டோம் என்று மத்திய அரசு பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் மாநிலத்தில் 152 கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்கா அமைக்க இருக்கும் அணு உலைக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இந்தியா வந்துள்ள அமெரிக்கா அதிபர் ஒபாமாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் இருநாடுகளிடையே வர்த்தக ரீதியிலான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் 2005-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கும் இடையே வாஷிங்டனில் கையெழுத்தானது. கடைசியாக இந்த உடன்பாடு தொடர்பாக வாஷிங்டனில் 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த கண்டலிசா ரைசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால் இந்த ஒப்பந்தம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. அணு உலையில் விபத்துக்கள் ஏற்படுகிறபோது பாதிக்கப்படுகிறவர்களுக்கு இழப்பை ஈடுசெய்வது யார் என்பது தொடர்பாக முட்டுக்கட்டை இருந்து வந்தது.
இந்த நிலையில் டெல்லியில் நரேந்திர மோடி- ஒபாமா இடையேனான நேற்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் மூலம் ஆந்திராவின் கோவடா, குஜராத் மாநிலம் பாவ்நகரின் மிதி விர்தி ஆகிய இடங்களில் அமெரிக்கா அணு உலைகளை நிறுவ இருக்கிறது.
இதன் மூலம் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ் கார்ப்பரேசன் நிறுவனம் ரூ60 ஆயிரம் கோடி மதிப்பில் 6,000 மெகா வாட் மின்னுற்பத்தித் திறனுள்ள அணு உலைகளைக் மிதி விர்தி கிராமத்தில் அமைப்பது உறுதியாகி உள்ளது.
ஏற்கெனவே மிதி விர்தி கிராமத்தைச் சுற்றி வாழும் மக்கள் இந்த அணு உலைத் திட்டத்துக்கு எதிராக கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியும் இருக்கின்றனர்.
தற்போது அணு உலை அமைப்பது உறுதியாகி இருப்பதால் மிதி விர்தியைச் சுற்றிய 152 கிராமங்களைச் சேர்ந்த 2 லட்சம் மக்கள் மீண்டும் அணு உலைத் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். எப்பாடுபட்டாலும் இந்த அணு உலைத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்று அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.