கவுரி லங்கேஷ் கொலைக்கு கண்டனம்- கர்நாடகாவில் பத்திரிகையாளர்கள் போராட்டம்
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராக கர்நாடகாவில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு எதிராக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
வலதுசாரிகளை மிக கடுமையாக எதிர்த்து வந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை மர்ம நபர்கள் நேற்று பெங்களூருவில் சுட்டுப் படுகொலை செய்தனர். இது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படுகொலையைக் கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூரு டவுன் ஹாலில் இன்று பத்திரிகையாளர்கள் கவுரிக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினர்.
அதேபோல் பெங்களூரு வேளாண் பல்கலைக் கழக மாணவர்களும் கவுரி படுகொலையைக் கண்டித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மைசூர், மாண்டியா, தார்வார் ஆகிய இடங்களிலும் கவுரி படுகொலையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கவுரி லங்கேஷ் கொலையைக் கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.