ரோகித் வெமுலாவின் பிறந்தநாளான ஜன. 30ல் டெல்லியில் திரளும் மாணவர்கள்.. 200 அமைப்புகள் தீவிரம்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவரான ரோகித் வெமுலா பிறந்த தினத்தினை முன்னிட்டு டெல்லியில் வருகின்ற 30 ஆம் தேதியன்று மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த 200 மாணவ அமைப்புகள் தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் தலித் மாணவர் அமைப்புக்கும், பா.ஜ.க மாணவர் அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து 4 தலித் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அந்த மாணவர்களை மீண்டும் சேர்க்க கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ரோகித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பதவி விலக போராட்டம்:
தலித் மாணவர்களை சஸ்பெண்ட் செய்ய நெருக்கடி கொடுத்ததாக மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி இருவர் மீதும் மாணவர்கள் குற்றம் சுமத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரும் பதவி விலகும் வரை போராட்டம் நடத்துவோம் என்று மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளன.
தீவிரமடையும் போராட்டம்:
இதற்கிடையே நாடெங்கும் 200 மாணவர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளன. இவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பிறந்ததினத்தன்று முடிவு:
தற்கொலை செய்த மாணவர் ரோகித்துக்கு வருகிற 30 ஆம் தேதி பிறந்த தினமாகும். அன்று நாடெங்கும் உள்ள மாணவர்களை டெல்லியில் திரட்டி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அதிகரிக்கும் நெருக்கடி:
இதற்காக 200 மாணவ அமைப்புகளும் ‘‘சலோ டெல்லி'' என்ற கோஷத்தை பிரபலப்படுத்தி வருகிறார்கள். மாணவ அமைப்புகளின் இந்த போராட்டம் மத்திய அரசுக்கும், தெலுங்கானா மாநில அரசுக்கும் மிகப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.