நிலக்கல்லில் 3 பெண் நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல்.. கார்கள் சேதம்.. பதற்றத்தில் சபரிமலை!
Recommended Video
நிலக்கல்: நிலக்கல்லில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்க வந்த 3 பெண் நிருபர்களின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக பல்வேறு அமைப்பைச் சேர்ந்த பெண்கள், பக்தர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை கோயில் நடை திறக்கப்படவுள்ள நிலையில் பெண்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நிலக்கல்லில் அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து வருகின்றனர்.
பக்தர்கள் மீது தாக்குதல் சம்பவங்களும் நடந்தேறுகின்றன. இந்நிலையில் பெண் பக்தர்களை தடுத்து நிறுத்துவதற்காக நிலக்கல்லில் போராட்டக்காரர்கள் குவிந்தனர்.
இதையடுத்து செய்தி சேகரிப்பதற்காக 3 பெண் நிருபர்கள் காரில் வந்தார். அப்போது அவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீதும் கார் மீதும் கல் வீசினர். இதனால் கார்களின் கண்ணாடிகள் உடைந்தன.
3 பெண் நிருபர்களும் காயமடைந்தனர். பின்னர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் மூலம் காரை அகற்றினர். இதனால் நிலக்கல்லில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.