இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா- சாத்வி பேச்சுக்கு எதிராக இமாம் கவுன்சில் போராட்டம்
டெல்லி: இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாத்வி பிராச்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இமாம் கவுன்சில் இன்று போராட்டம் நடத்தியது.
பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே சர்ச்சைக்குரிய கருத்துகளை அடிக்கடி தெரிவித்து வருகிறார் சாத்வி பிராச்சி. அண்மையில், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் பணி முன்பே முடிந்து விட்டது. இனி இஸ்லாமியர்களை நாட்டில் இருந்து வெளியேற்றும் நேரம் வந்து விட்டது என கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இமாம் கவுன்சில் இன்று டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையத்திடம் அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
இது குறித்து இமாம் கவுன்சில் பொது செயலாளர் மப்தி ஹனீர் அஹ்ரார் கஸ்மி கூறுகையில், சாத்வி பேச்சு அரசியலமைப்புக்கு எதிரானது; நமது நாட்டின் மதசார்பற்ற நிலையையும் அது பாதிக்கும்.
இரு வெவ்வேறு மதங்களுக்கு இடையே பகையை ஊக்குவிக்கும்; மத அடிப்படையில் சமூகத்தில் தொடர்ந்து வன்முறையை தூவி வரும் அவர் நாட்டிற்குள் பொது கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.