பெங்களூர் அருகே, கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் திடீர் போராட்டம்!
பெங்களூர்: காவிரி பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், பெங்களூர் அருகேயுள்ள கருணாநிதி மகள் செல்வி வீட்டு முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்திவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி குடும்பத்தோடு, பெங்களூரில் வசித்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் அக்குடும்பத்தாருக்கு சொத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. சன் குழுமத்தின் கன்னட சேனலான உதயா டிவி நெட்வொர்க்குகளை செல்வி கணவர் கவனித்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
செல்வி வீடு பெங்களூர் அடுத்த, ராம்நகர் மாவட்டத்திலுள்ள கரிகாலே தொட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டின் முன்பு கன்னட அமைப்பினர் சிலர் இன்று காலை போராட்டம் நடத்தினர். இதனால் செல்வி வீட்டு முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
தமிழர்களின் சொத்துக்களை கன்னட அமைப்பினர் தேடி தேடி நொறுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.