ஐ.டி. இல்லை என்றால் ஓட்டு போட முடியாது: மத்திய அமைச்சரை தடுத்த தேர்தல் அதிகாரிகள்
ஜம்மு: ஜம்மு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தை அடையாள அட்டையை காண்பித்த பிறகு வாக்களிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு தொகுதியில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதையடுத்து ஜோகி கேட் பகுதியில் உள்ள டிபிஎஸ் வாக்குச்சாவடிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான குலாம் நபி ஆசாத் வாக்களிக்க சென்றார். அவர் அடையாள அட்டையை எடுத்துச் செல்லவில்லை.
இதனால் அவரை அடையாளத்தை நிரூபித்துவிட்டு வாக்களியுங்கள் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். உடனே உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர் வந்து ஆசாத்துக்காக உத்தரவாதம் அளித்த பிறகே அவர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
இவர் தான் குலாம் நபி ஆசாத். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் அதிகாரிகளிடம் கூறினார். ஆமாம் ஆசாத் மூத்த அரசியல் தலைவர் என்று பாஜக தலைவர்களும் தேர்தல் அதிகாரிகளிடம் தெிவித்தனர்.
உத்தம்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ஆசாத்தின் பெயர் ஜம்மு வாக்காளர் பட்டியலில் உள்ளது.