வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை- திருத்தம் வருகிறது: சுஷ்மா ஸ்வராஜ்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இனி இந்தியா வர தேவையில்லை.. உறவினர்கள் வாக்களிக்கும் முறைக்கான திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
அகமதாபாத்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க இந்தியா வர தேவையில்லை; அவர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க வகை செய்யும் சட்ட திருத்தம் விரைவில் கொண்டுவரப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜக மகளிர் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
இந்தியாவில் வாக்களிப்பு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தற்போது வாக்களிக்க வேண்டுமெனில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தேர்தலில் வாக்களிக்க இந்தியாவுக்கு வர வேண்டும்.
உறவினர்களுக்கு அனுமதி
ஆனால் விரைவில் இந்த நடைமுறையில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு பதில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை வாக்களிக்க அனுமதிக்கலாம்.
அத்தாஅட்சி கடிதம்
இதற்கான அத்தாட்சி கடிதத்தை அனுப்பி வைத்தாலே போதும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பதில் உறவினர்கள் வாக்களிக்க முடியும் என்கிற சூழல் வர இருக்கிறது.
பிரதமர் மோடிக்கு பாராட்டு
மத்திய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவில் 2 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சர் என்கிற வகையில் நானும் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இடம்பெற்றுள்ளோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.