8 செயற்கைக்கோளுடன் பாயும் பிஎஸ்எல்வி - சி35... கவுன்ட் டவுன் தொடங்கியது... நாளை விண்ணில் பறக்கிறது
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து 8 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி35 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்ட் டவுன் நேற்று தொடங்கியது.
விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது இந்தியா.
அந்தவகையில், இந்திய ராக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரே பயணத்தில் இருவிதமான சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக் கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன.
இந்த எட்டு செயற்கைக்கோள்களையும் பிஎஸ்எல்வி-சி35 ராக்கெட் ஏந்திச் செல்கிறது. இதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடையுள்ள 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது.
அதுதவிர அல்ஜீரியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் தயாரித்துள்ள 5 செயற்கைக் கோள்கள், மும்பை ஐஐடி உருவாக்கியுள்ள 'பிரதம்', பெங்களூரு பிஇஎஸ் பல்கலைக்கழகம் உருவாக்கி யுள்ள 'பிசாட்' செயற்கைக் கோள் போன்றவையும் இந்த ராக்கெட்டில் அனுப்பப்படுகின்றன.
இது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் கட்டுப் பாட்டில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
நாளை காலை 9.12 மணியளவில் விண்ணில் ஏவப்படும் இந்த ராக்கெட்டுக்கான 48 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.