எனது மகன் தற்கொலை படையை சேர்ந்தவனாக இருப்பான் என கற்பனை கூட செய்ததில்லை.. தந்தை உருக்கம்
Recommended Video
புல்வாமா: எனது மகன் தற்கொலை படையைச் சேர்ந்தவனாக இருப்பான் என கற்பனை கூட செய்து பார்க்கவில்லை என ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற 19 வயது இளைஞர் வெடிப்பொருட்களுடன் சென்று இந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனத்தில் பயங்கரமாக மோதினார். இதில் 40 வீரர்கள் பலியாகிவிட்டனர்.
வேதனை
பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து தீவிரவாதியின் தந்தை குராம் ஹாசன் தார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரின் வலியையும் வேதனையையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
இது எப்படி
எனது மகன் தற்கொலை படையைச் சேர்ந்தவனாக இருப்பான் என நான் நினைக்கவே இல்லை. நான் படிக்காதவன். என்னால் இது போன்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது எப்படி நடந்தது என எனக்கு தெரியவில்லை.
விருப்பம்
கடந்த ஆண்டு அவன் காணாமல் போன போது 12-ஆம் வகுப்பு தேர்வை எழுதியிருந்தான். தீவிரவாத இயக்கத்தில் சேரும் அளவுக்கு எந்தவித உந்துதலும் அவனுக்கு இல்லை. இது போல் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் தீவிரவாதியாக யாரும் மாறக் கூடாது என்பதே எனது விருப்பம்.
பிரச்சினைக்கு தீர்வு
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாததே இதற்கு காரணம். எனவே இந்திய அரசு தீர்வு காண வேண்டும் என்றார். கடந்த ஆண்டு 16வயது பர்தீன் அகமது சிஆர்பிஎஃப் தங்குமிடத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர் இதை அரங்கேற்றுவதற்கு முன்னர் வீடியோ பதிவை அனுப்பினார். அது போல் புல்வாமா தாக்குதலுக்கு முன்பு ஆதில் அகமது தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வீடியோ பதிவை அனுப்பியுள்ளார்.