குழந்தைகள் தின ஸ்பெஷல் 'கூகுள் டூடுள்' போட்டி: 9ம் வகுப்பு வைதேகி வெற்றி
மும்பை: குழந்தைகள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட கூகுள் டூடுள் போட்டியில் பூனேவில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் வைதேகி ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
குழந்தைகள் தினத்தையொட்டி கூகுள் இந்தியாவில் டூடுள் போட்டியை நடத்தியது. 50 நகரங்களில் உள்ள 1,700 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் டூடுள் வரைந்து சமர்பித்தனர். இந்த போட்டி மூன்று பிரிவாக நடந்தது. 1-3ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும், 4-6ம் வகுப்பு மாணவ, மாணவியர் ஒரு பிரிவாகவும், 7-10ம் வகுப்பு ஒரு பிரிவாகும் போட்டி நடத்தப்பட்டது.
இந்தியாவில் நான் பார்க்க விரும்புகிற இடம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டியில் புனேவில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் வைதேகி ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். அவர் தான் அஸ்ஸாம் செல்ல விரும்புவதை டூடுளாக வரைந்துள்ளார்.
இயற்கை வளம் கொழிக்கும் அஸ்ஸாம் கலாச்சாரத்திற்கும் பெயர் போனது என்பதை அவர் தனது டூடுளில் தெரிவித்துள்ளார். வரும் 14ம் தேதி அதாவது குழந்தைகள் தினத்தன்று கூகுளின் இந்தியா பக்கத்தில் வைதேகியின் டூடுள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் படிக்கும் குழந்தைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.