தங்கத்தில் சட்டை அணிந்து பரபரப்பைக் கிளப்பிய புனே தொழிலதிபர் கல்லால் அடித்தே கொலை!
புனே: தங்கத்தால் செய்யப்பட்ட சட்டையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்திய புனே தொழிலதிபர் தத்தா புகே மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
புனே அருகே உள்ள பிம்ப்ரியைச் சேர்ந்தவர் தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி சீமா, புனே மாநகராட்சி கவுன்சிலர்- தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.
தங்க சட்டை
5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வந்து கொண்டிருந்தார் தத்தா புகே. கடந்த 2013ம் 3.25 கிலோ தங்கத்தில் சட்டையை உருவாக்கி அதை அணிந்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.
நள்ளிரவு பார்ட்டிக்கு...
இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நண்பர் ஒருவர் தத்தா புகேவை அழைத்திருந்தார். இந்நிகழ்ச்சிக்காக மகனுடன் திறந்த வெளி மைதானம் ஒன்றுக்கு தத்தா புகே சென்றார்.
மகன் கண்முன்னே...
அப்போது 12 பேர் அடங்கிய கும்பல் புகே மீது கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில் மகன் கண்முன்பே தத்தா புகே பலியானார்.
நிதி நிறுவன விவகாரம்?
தத்தா புகேவின் சிட்பண்ட் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவரது நிதிநிறுவனத்தில் தொழிலதிபர்கள் பலரும் முதலீடு செய்திருந்தனர். வழக்கமாக பாதுகாவலர்களுடன்தான் தத்தாபுகே வெளியே செல்வது வழக்கம். நள்ளிரவு பார்ட்டிக்கு செல்லும்போது அவர்களை தத்தா புகே அழைத்துச் செல்லவில்லை எனவும் கூறப்படுகிறது.