சிங்கார சென்னையை பின்னுக்குத்தள்ளிய திருச்சி!
டெல்லி: இந்தியாவில் வாழ ஏற்ற நகரங்களின் பட்டியலில் சிங்கார சென்னையை திருச்சி மாநகரம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
இந்திய நாட்டில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது. மக்கள் ஒரு நாட்டில் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்றால் அது அவர்கள் வாழும் நகரங்களின் சமூக, பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு வசதிகள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதனை அடிப்படையாக கொண்டு மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தியாவில் எந்த நகரங்கள் முன்னிலையில் உள்ளது என்பதை காணலாம்.
முதல் இடம் பிடித்த நகரம்
மத்திய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில், மொத்தமாக 111 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த நகரம் மஹாராஷ்டிராவில் உள்ள புனே ஆகும். அதே மஹாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை 2-வது இடத்திலும், பெருநகர் மும்பை 3-வது இடத்திலும் உள்ளன.
முதல் பத்து இடங்களை பிடித்த நகரங்கள்
இந்த பட்டியலின் முதல் பத்து இடங்களில் 3 நகரங்கள் மகாராஷ்டிராவிற்கே கிடைத்துள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்கள் உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் 10 இடங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
சென்னை
தமிழ்நாட்டின் சிங்கார நகரமான சென்னையை பின்னுக்கு தள்ளி உள்ளது திருச்சி. ஆம், இந்தப் பட்டியலில் திருச்சி 12-வது இடத்திலும், சென்னை 14-வது இடத்திலும் உள்ளன. அது மட்டும் அல்ல நம் நாட்டின் பிரதமரின் சொந்த தொகுதியான வாரனாசி 33-வது இடத்தில் உள்ளது. குஜராத்திலுள்ள அகமதாபாத் 23-வது இடத்திலும், ஹைதராபாத் 27-வது இடத்திலும் உள்ளன.
கடைசி பத்து இடங்கள் பிடித்த நகரம்
இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஜம்மு 95-வது இடத்திலும், ஸ்ரீநகர் 100-வது இடத்திலும் உள்ளன. கடைசி 10 இடங்களில் பிகார் தலைநகர் பாட்னா, நாகாலாந்து தலைநகர் கோஹிமா, அருணாசலப் பிரதேச மாநில தலைநகர் இட்டாநகர் உள்ளிட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளன என குறிப்பிடத்தக்கது.