இதிலுமாய்யா "டூப்பு".. எவரெஸ்ட்டைத் தொட்டதாக கூறி 'மார்பிங்' படத்தைப் போட்டு அசிங்கப்பட்ட தம்பதி!
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் தம்பதி ஒன்று சமீபத்தில் தாங்கள் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்ததாக கூறி படம் ஒன்றையும் வெளியிட்டது. ஆனால் அது மார்பிங் செய்யப்பட்ட படம் என்று தற்போது குட்டு அம்பலமாகி விட்டது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
எவரெஸ்ட் சிகரத்தை இணைந்து தொட்ட முதல் தம்பதி தாங்கள்தான் என்று இருவரும் பெருமை அடித்திருந்தனர். ஆனால் அது பொய் என்று தற்போது அம்பலமாகியுள்ளது. இன்னொருவரின் படத்தை எடுத்து அதை இவர்கள் மார்பிங் செய்து வெளியிட்டு தற்போது அசிங்கப்பட்டுள்ளனர்.
அந்தத் தம்பதியின் பெயர் தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி. இவர்கள் ஜூன் முதல் வாரத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அதில் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில் நிற்பது போல இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை தாங்கள் அடைந்த சாதனை படைத்துள்ளதாக அவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து இருவரும் மகாராஷ்டிரா முழுவதும் படு பிரபலமாகினர். ஆனால் உண்மையில் வேறு ஒருவரின் படத்தை எடுத்து அதை மார்ப் செய்து வெளியிட்டுள்ளனர் இருவரும்.
இதுகுறித்து புனே போலீஸாருக்குப் புகார்கள் வந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். மேலும் நேபாள அரசும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தாரகேஸ்வரி விளக்கம் தருகையில் தற்போது இந்த விவகாகரம் விசாரணையில் இருப்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
இவர்களின் திருட்டுத்தனத்தை புனேயைச் சேர்ந்த சுரேந்திர ஷெல்கே என்ற மலையேற்ற வீரர்தான் முதலில் கண்டுபிடித்தார். இந்தத் தம்பதி எடுத்துப் பயன்படுத்திய புகைப்படத்தில் உண்மையில் இருப்பவர் சத்யரூப் சித்தாந்தா என்பவர். அவரது புகைப்படத்தை எடுத்துத்தான் இந்த மகாராஷ்டிர போலீஸ் தம்பதி மார்பிங் செய்து ஏமாற்றியுள்ளது.
தனது ஒரிஜினல் படத்தை சித்தாந்தா தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். அதில், இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எனது புகைப்படத்தை எடுத்து போட்டோஷாப் செய்து போட்டுள்ளனர். நேபாள அரசிடமிருந்து சான்றிதழையும் வாங்கியுள்ளனர். அவர்கள் எந்த மலையில் ஏறினார்கள்.. புனே போலீஸ் தம்பதியைப் பார்த்து வெட்கப்படுகிறேன்.. என்று கூறியுள்ளார் அவர்.