என்னங்க சொல்றீங்க.. செருப்பை காணோம் என்று போலீஸைத் தேடி வந்த புனேகாரர்!
புனேவில் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர் தனது செருப்பை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புனே : புனேவைச் சேர்ந்த விஷால் என்பவர் தனது செருப்பை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்துள்ளார், போலீசாரும் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனேவின் கேத் தேசில் பகுதியில் ரக்ஷேவாடி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் விஷால் கலேகர் என்பவர் அக்டோபர் 3ம் தேதி புனே புறநகர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்து காலணி காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
கேத் போலீசாரும் இது குறித்து திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். செருப்பு காணாமல் போனதற்கு வழக்கு போடப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ள கேத் காவல் நிலைய ஆய்வாளர் பிரதீப் ஜாதவ், இது வரை இது போன்றதொரு புகார் வந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.
செருப்பு காணவில்லை என வழக்கு
யார் எது போன்ற புகாரை எடுத்துக் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை, அப்படி இருக்கும் போது விஷால் தன்னுடைய ரூ. 425 மதிப்புடைய காலணி காணாமல் போனது குறித்து வழக்கு பதிந்தே தீர வேண்டும் என்று வலியுறுத்தியதையடுத்து திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்.
போலீசார் விசாரிக்கின்றனர்
இது வரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. திருட்டு சம்பவம் அதிகாலை 3 மணி முதல் 8 மணிக்குள்ளாக நடந்துள்ளதாக தெரிகிறது, திருடன் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் ஆய்வாளர் ஜாதவ் கூறியுள்ளார்.
எஃப்ஐஆர் நகல் உடனுக்குடன் அளிப்பு
விஷால் கலேகர் செருப்பை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த எஸ் திருட்டு வழக்கு பதிவு செய்து உடனுக்குடன் எஃப்ஐஆர் காபியும் அளித்துள்ளார் என்பது தான் ஆச்சரியத்தின் மறுமுனை.
ஆச்சரியத்தை தரும் செயல்
பலரும் காவல்நிலையத்தில் நியாயமான கோரிக்கைக்குக் கூட போலீசார் வழக்கு பதிய மறுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். இது போன்ற புகார்களுக்கு மத்தியில் புனே போலீசார் ஒரு வித்தியாசமான புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது ஆச்சரியத்தை தருகிறது.