புனே இன்போசிஸ் பெண் ஊழியரை கொன்ற காவலாளி கைது- சிக்க வைத்த தடயம்
புனேயில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரின் கொலை தொடர்பாக அசாமை சேர்ந்த காவலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புனே: கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரசிலா ராஜூ. 25 வயதான இவர் புனேவின் ஹிஞ்ஜேவாடியில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
விடுமுறை நாளான ஞாயிறன்று தனது பணியை செய்வதற்காக அலுவலகம் வந்தார் ரசிலா.
ரசிலாவை அவரது மேலாளர் பல முறை தொலைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால், பாதுகாவலரை அழைத்து பார்த்து வர கூறினார். இதையடுத்து பாதுகாவலர் சென்று பார்த்தபோது ரசிலா வேலை பார்க்கும் 9வது மாடியில் ஒயரால் கழுத்து நெரிக்க பட்ட நிலையில் மயக்கமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக ரசிலாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரசிலா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் பாதுகாப்புக் காவலர்தான் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் புனேவில் படுகொலை செய்யப்படும் இரண்டாவது பெண் ஐடி ஊழியர் என்பதால் பதற்றமும் பரபரப்பும் அதிகரித்தது.
சிக்கியது எப்படி?
மதியம் 2 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ரசிலாவின் பணி நேரம் இரவு 11 மணி வரையாகும். இதற்கிடைய, மாலை 5 மணிக்குப் பிறகு அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், இன்போசிஸ் திட்ட மேலாளர், இரவு 8 மணியளவில் அலுவலக பாதுகாவலரை தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்குள் சென்று ரசிலாவை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
காவலாளிதான் காரணம்
அவர் உள்ளே சென்று பார்த்த போது, ரசிலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரசிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது. அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பபென் செயில்சியா,மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார்.
தப்பிச்சென்ற காவலாளி
பபென் செயில்சியா அசாமைச் சேர்ந்தவர். அவர் நேராக தனது இருப்பிடத்துக்குச் சென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு கிளம்பியுள்ளார்.
ரசிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில்தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது இருப்பிடத்துக்குச் சென்றனர். ஆனால் அதற்குள் பபென் புனேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று இன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் இன்போசிஸ் ஊழியர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கொலையாளி சிக்கியது எப்படி?
இச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெண் போலீஸ் உயரதிகாரி, "புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஐடி தொழிற்பூங்காவில் இன்போசிஸ் மென்பொருள் நிறுவன வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் 9வது தளத்தில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்றோம். அந்தப் பெண்ணின் கழுத்தை கம்ப்யூட்டரில் இருந்த கேபிளைக் கொண்டு இறுக்கி கொலை செய்திருந்தனர். அவரது முகத்திலும் காயங்கள் இருந்தன. இந்த கொலைக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை என்றார்.
காவலாளி கைது
மாலை 5 மணியிலிருந்து 6.30 மணிக்குள் இந்தக் கொலை நடந்திருக்க வேண்டும். கொலை சம்பவம் நடந்த நாள் ஞாயிற்றுக்கிழமை. அவசர வேலை காரணமாக விடுமுறை நாளன்று அந்தப் பெண் அங்கு பணி புரிந்து கொண்டிருந்துள்ளார். அந்தப் பகுதிக்கு காவலாளியைத் தவிர வேறு யாரும் செல்ல வாய்ப்பில்லை. எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் அசாமைச் சேர்ந்த அந்த காவலாளியை கைது செய்துள்ளோம். அந்த நபரும் கொலை நடந்த அன்று மாலையே தனது சொந்த ஊரான அசாமுக்கு செல்ல முயற்சித்தது எங்களது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.